Saturday, February 15, 2014

அமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும்

பிசினஸ் பார்ட்னர், அவரோட டொயோட்டா செக்கோயா வண்டிய ஊருக்குத் திரும்பி போறவரைக்கும் ஓட்டிக்கோப்பான்னு சொல்லி குடுத்துட்டாரு. ரொம்ப நாளா ஓட்டாம, பனியிலேயே இருந்ததாலே, பேட்டரி செத்துப்போச்சு. அவர் வீட்டுக்கு ஆல் ஹேண்டா இருக்குற பாப் ங்குற வெள்ளைக்காரரோட பேட்டரி மாத்தலாம்னு போயிட்டு திரும்பி வீட்டுக்கு வரப்போ, பின்னாடியே வந்த போலிஸ்கார் லைட்டைப் போட்டுட்டாரு (இங்கே, பின்னாடி போலிஸ்கார் லைட்டைப் போட்டா, வண்டிய ஓரங்கட்டிடணும்).

நாம ஒன்னும் தப்பு பண்ணலையேன்னு என்னான்னு கேட்டா, லைசன்ஸ் குடுன்னாரு. இந்தியன் லைசன்ஸக் குடுத்தேன். குழப்பத்தோட வாங்கிப் பாத்துட்டு, மின்னசோட்டா லைசன்ஸ் இல்லையான்னு கேட்டாரு. இல்லைன்னேன் (என்னோடது 2011ல் செத்துப்போச்சு). என்ன தப்பு பண்ணேன், எதுக்கு நிறுத்தினீங்கன்னு கேட்டேன். லைசன்சக் காட்டி இதுதான் பிராப்ளம்னு சொன்னாரு. நான், இந்தியன் லைசன்சோட ஒரு வருடம் வரை ஓட்டலாம்ங்குற மின்னசோட்டா சட்டத்தைச் சொன்னேன். எப்பிடித் தெரியும், அதுக்கு ஏதாவது டாக்குமென்ட் இருக்கான்னாரு. உங்க வெப்சைட் பாத்துதான் சொன்னேன்னேன், ஜெனிவா கன்வென்ஷன் படி அமெரிக்காவும், இந்தியாவும் பரஸ்பரம் சொந்த நாட்டு லைசன்ஸ் வச்சு 1 வருடம் வரை ஓட்டலாம். ஆனா, அது பிசினஸ் விசாவுக்கு மட்டும்தான் பொருந்தும்ங்குற சட்டத்தையும் சொன்னேன். பாஸ்போர்ட் இருக்கான்னாரு. பிசினஸ் பார்ட்னர் வீட்ல இருக்குன்னேன். இன்சுரன்ஸ் இருக்கான்னாரு, அதுவும் வீட்ல இருக்குன்னு சொன்னேன். ஒரு நிமிஷம்னு சொல்லிட்டு, அவர் வண்டிக்குப் போய் அவர் மேலதிகாரிக்குக் கால் பண்ணிருப்பாருன்னு நினைக்கிறேன்.

5 நிமிடம் கழிச்சு திரும்பி வந்து, இனிமே வெளில போகும்போது பாஸ்பார்ட்டோட போங்க, இப்போ நீங்க போகலாம்னு சொன்னாரு. உடனே, கூட வந்த பாப் (இவர் ஒரு முன்னாள் ராணுவத்தினர் - வெட்டரன்), நீங்க அவர் கேட்ட கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லலய்யேன்னு போலிசப் பாத்து கேட்டாரு. போலிஸ்கார், வண்டி ஓனருக்கு லைசன்ஸ் இல்லன்னு சொன்னாரு. ஒரே குழப்பமா போச்சு, இருந்தாலும், நாங்க எதுவும் தப்பா வண்டி ஓட்டல, எதுக்கு வண்டிய நிறுத்துனீங்கன்னு பாப் போலிஸ்கார் கிட்ட பிரச்சினை பண்ண ஆரம்பிச்சுட்டாரு. எனக்கு, ஏதுடா வம்பா போச்சு, அவரே நாமள போகச் சொல்லிட்டாரு, பாப் எதுக்கு பிரச்சினை பண்றாருன்னு, பாப் ஐ சமாதானம் சொல்லி, போலிஸ்கார்கிட்டே நன்றி சொல்லி வீடு வந்து என் பிசினஸ் பார்ட்னர்கிட்ட கேட்டா, அவர், ஆமா நான் கொஞ்ச நாளா சைல்ட் அலிமோனி கட்டல (முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைக்கு சப்போர்ட்), சமீபத்துல இவரோட 22 வயசு பையன் மனநிலை பாதிக்கப்பட்டு துப்பாக்கியால சுட்டுகிட்ட்டு தற்கொலை செஞ்சுகிட்டான், அந்த சமயத்துல இவர் 2 மாசம் அந்த செக் அனுப்பாம விட்டுட்டாரு. அதனால, நிர்வாகம், அவரோட லைசன்ஸ தற்காலிகமா நிறுத்தி வச்சுருக்கு, இவருக்குத் தெரிவிக்காம (அல்லது, இவர் தெரிவித்தலை அறியவில்லை).

முதல்நாள், அதுவும் லாரி பெருசுக்கு இருக்குற செக்கோயா ஓட்டும்போது, கொஞ்சம் மெதுவா போனதால வந்த வினை, பின்னாடி வந்த போலிஸ்கார், தன் கணிணியில் வண்டி நம்பரை வச்சு, லைசன்ஸ் தற்காலிகமா நிறுத்தி வைக்கப்பட்டுருக்குனு தெரிஞ்சுக்கிட்டு, என் பிசினஸ் பார்ட்னர்தான் வண்டிய ஓட்டுறார்னு நெனச்சு நிறுத்தி இருக்காரு!

பார்ட்னர்கிட்ட சொன்னவுடன், அவரோட ஃபண்ட் மேனேஜர்கிட்ட போன் பண்ணி, உடனே பெண்டிங் கிளியர் பண்ணச் சொல்லிட்டாரு. எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை, கிளியர் பண்ற வரைக்கும், நாந்தான் பார்ட்னருக்கு ட்ரைவர் வேலை பாக்கணும் :(

பாடங்கள்:

1. என்னோட டவுன்டவுன் வாலன்டைன் பார்ட்டிக்கு சங்கு.
2. பார்ட்னர் அவரோட கிறிஸ்டியன் பார்ட்டிக்குப் போக முடியாம பயந்துகிட்டு வண்டி ஓட்டல.
3. பிசினஸ் விசாவுல இருக்குறவங்க கையோட பாஸ்போர்ட் வச்சுகிட்டு திரிங்க.
4. போலிஸ்கார்கிட்ட ஆர்க்யூ பண்ணாதீங்க.
5. என்னதான் அமெரிக்கா வாங்க வாங்கன்னு அழைச்சாலும், சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை (பார்ட்னர் புலம்பியது, தனி விவாதத்துக்கு ஏற்றது)

Monday, December 30, 2013

சாரி 2013, உன்னை எனக்குப் பிடிக்கல!

இன்றிரவு, கொடைக்கானல் ஸ்டெர்லிங் ரிசார்ட்டுக்கு செல்கிறேன், குடும்பத்தோடு புத்தாண்டை வரவேற்க. கொண்டாடும் மனநிலையில் இல்லையென்றாலும், குடும்பத்திற்காக.

எத்தனையோ வருடங்கள் கடந்து வந்தாகிவிட்டது, லாபங்கள், நட்டங்கள், வரவு, செலவு எல்லாமும் பார்த்தாகிவிட்டது! ஆனால், எனக்கு 2008, 2013 மாதிரி சோதனை கொடுத்த வருடங்கள் என வேறு எதுவும் இல்லை!!

நான் மட்டும்தான் புலம்புகிறேன் என்று பார்த்தால், என் நெருங்கிய நண்பர்கள் சில பேருக்கும் இந்த வருடம் சோதனையான வருடம்.

எல்லா தடைகளும் நீங்கி, நானும், நண்பர்களும் வரும் வருடத்தில் ஏற்றம் பெற விருப்பம். பார்க்கலாம், 2014 என்ன வைத்துக்கொண்டு காத்திருக்கிறது என்று!!

நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய 2014 புத்தாண்டு வாழ்த்துகள்!!




Thursday, March 8, 2012

கவர்ன்மெண்ட் கண்ணாஸ்பத்திரி!


நேற்று நள்ளிரவு 12:30 இருக்கும், தூங்கப் போகலாம்ணு பெட்டுக்குப் போயி கண்ணயரும் நேரம் திடீர்னு கண்ணில் ஏதோ தூசி விழுந்த மாதிரி ஒரு உணர்வு. சரி, நம்மூர்ல இருக்கும் பாசக்கார தூசிப் பயபுள்ள நம் கண்ணுக்குக் கண்ணா வந்துருச்சு போலன்னு அனிச்சையா கண்ணைக் கசக்கிட்டேன். சில வினாடிகள் ஆச்சு, ஒன்னும் சரியாகிற மாதிரி இல்ல. சரி ஏதோ, பூச்சிதான்
தஞ்சமடைய வந்திடுச்சு போலன்னு லைட்டை போட்டு (அட ஆமாங்க, கரண்ட் இருந்துச்சு!) கண்ணாடில பாத்தா இடது கண்ணு புசுபுசுன்னு வீங்கிடுச்சு. இதுமாதிரி முன்ன பின்ன ஆனது இல்லேங்கிறதாலயும், கண்ணானது நமக்கு கண் போன்றது(!?) எனும் காரணத்தாலயும் கொஞ்சம் முனைப்பா பாத்தா, கண்ணுக்குள்ளே கலவரம் ஆகி, வெள்ளை கறுப்பை மறைச்சு ஒரு layer கட்டிடுச்சு.

தங்ஸ் உடனே பரபரப்பாகி, கண்ணைக் கழுவுங்க, கண்ணைக் கழுவுங்கன்னு என்னவோ நான் சைட்டடிக்கும்போது சொல்றமாதிரி திரும்பத் திரும்பச் சொல்லிகிட்டே இருந்தாங்க. எனக்கு எதுவோ சரியில்லை மாதிரியான உணர்வு!

உடனே கிளம்பி, பக்கத்தில் இருக்கும் KM மருத்துவமனைக்குப் போகலாம்னு முடிவெடுத்தாச்சு. தங்ஸ் நான் ஸ்கூட்டில கூப்பிட்டுக்கிட்டுப் போறேன்னு சொன்னதும் புதுப்பயம் தொத்திகிச்சு! ஆத்தா, நீ இருக்குற டென்ஷன்ல எங்கியாவது ஆட்டோவா பாத்து மோதிடாதேன்னு கேட்டுகிட்டேன். நல்லவேளை, சாலையில் யாரும் இல்லைங்குறதாலே ஒத்தக்கண்ணன் உயிருக்குப் பங்கம் வரல. மருத்துவமனைக்குப் போயி கேட்டா, இங்கே பணி மருத்துவர் மட்டும்தான் இருக்காரு, பக்கத்துல இருக்கும் clinic போங்கன்னு சொன்னாங்க. அங்கே போனா, ரெண்டு பணி மருத்துவர்கள், இளைஞர்கள். கண்ணப் பாத்துட்டு, allergy மருந்து எழுதித் தரேன்ன்னாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஒரு சின்ன discussion என்னவா இருக்கும்னு. எனக்கு, அங்கே பாக்கிறது சரின்னு படல. அவங்ககிட்டேயே கேட்டோம், இப்போதைக்கு கண் பாக்குற மருத்துவர் எங்கே இருப்பார்னு. அவரு, இப்போ எந்த சிறப்பு மருத்துவமனையும் இருக்காது, பேசாம எழும்பூர்ல உள்ள அரசு கண் மருத்துவமனைக்குப் போங்கன்னு சொன்னார்.

எனக்கு அந்த மருத்துவமனையைப் பத்தி தெரியாது. தவிரவும், அரசு மருத்துவமனைகள்மேல் பொதுவாக இருக்கும் தப்பான ஒரு பார்வை எனக்கும் இருந்தது. தயங்கிகிட்டே, சரி வாசன் மருத்துவமனையை எதுக்கும் ஒரு தடவை பார்க்கலாம்னு முடிவு பண்ணேன். அவ்வளவு தூரம் தங்ஸ் வண்டி ஓட்டவேணாம்னுட்டு (கடவுள் உசுருக்கு ஒரு தடவை மேல கருணை காட்டலேன்னா?) ஒரு ஆட்டோவைப் பிடிச்சோம். நான் நண்பர்களை யாராவது கூப்பிட்டுகிட்டுப் போறேன்னு சொன்னா, தங்ஸ் அவங்கல்லாம்
தூங்கிகிட்டு இருப்பாங்க, தொந்தரவு பண்ணவேணாம், நானே கூட வரேன்னுட்டாங்க (நண்பர்களே, இன்னுமா நம்மள இந்த உலகம் நம்புது?). நல்லவேளை, வீட்டில் அக்கா பையன் இருந்ததால் குழந்தைகளைப் பாத்துக்கச் சொல்லிட்டு முதலில் வடபழனி வாசனுக்கு போகச் சொன்னேன். இடையில், இடது கண்ணை திறக்கவே முடியல, ஆனா வலி இல்ல. முதல்ல பார்த்த மருத்துவர், நீங்க நெனச்சமாதிரி விழிப்படலம் கிழியல்லாம்
இல்ல, கிழிஞ்சுருந்தா வலி தாங்க முடியாதுன்னு சொன்னார்.

வாசன் பூட்டி இருந்தது. பக்கத்தில் நின்றிருந்த ஆட்டோக்காரர், சூரியாவுக்குப் போங்க அங்க பாப்பாங்கன்னு சொன்னார். சரின்னுட்டுஅங்கே போனா, அங்கேயும் பணி மருத்துவர் மட்டும்தான் இருக்கார். சரி இது ஒத்துவராதுன்னு ஆட்டோவை நேரா எழும்பூருக்கே விடச்சொன்னேன். வண்டி வேகமெடுக்கவும், எனக்குள் பல சிந்தனைகள். இனிமே, நம்மள ஒத்தக்கண்ணன்னுதான் கூப்பிடப்போறதாக உறுதியா நம்பினேன். நினைவில், அந்தக்கால ஒத்தக்கண்ணன் வில்லன்கள் வரிசையா வந்து hai
சொல்லிட்டுப்போனாங்க. எனக்கு என்னவோ, water world villain தான் புடிச்சுருந்தாரு, சரி அதேமாதிரி கெட்டப்புலேயே ஆகிருவோம்னு முடிவெல்லாம் பண்ணியாச்சு!

தங்ஸ் வழி முழுக்க இருந்த பெரிய கோயில்களில் இருந்து, இன்னிக்கோ நாளைக்கோ இடிபடப்போகும் சாலையோர திடீர் தெய்வங்கள் வரை instant பிரார்த்தனை, நேர்த்திகடன் எல்லாம் வேண்டிகிட்டு வந்தாங்க. நல்லா ஆனதுக்கு அப்புறம், என்ன பாடோ? எந்தக் கோயில் நேர்த்திக்கடனோ? இவ்வளவு ரணகளத்திலும், தூங்கப்போறதுக்கு கொஞ்ச முன்னாடி ஒரு சாமியைப் பத்திக் கிண்டலடிச்சுகிட்டு இருந்தேனே, அதான் கண்ணக் குத்திருக்குமோன்னு நான் கேட்ட கேள்வியை தங்ஸ் ரசிக்கவில்லை! நீங்க அடங்கவே மாட்டீங்களான்னு ஒரு முறைப்பு கிடைத்தது.

ஒரு வழியா மருத்துவமனை வந்தோம். யாருமே இல்லை (ஈ, காக்கா உள்பட. ஆனா நிறைய நாய்கள் வெளியில் நின்றிருந்தன). ஆட்டோவை காக்கச் சொல்லிவிட்டு உள்ளே போனோம். ஒரு ஆண் செவிலி வந்து என்னவென்று கேட்டார். விபரத்தைச் சொன்னோம். உக்காரச் சொல்லிவிட்டு உள்ளே போனார். கொஞ்ச நேரம் கழித்து ரெண்டு பெண் மருத்துவர்கள் வந்தார்கள். ஒருவர் ரொம்பச் சின்ன வயது. இன்னொருவர் 30 - 35 இருக்கலாம், கர்ப்பமாக இருந்தார். அடடா, அவரை இந்த நேரத்தில் தொந்தரவு செஞ்சுட்டமேன்னு கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தது. ரெண்டு பேரும் ரொம்ப பொறுமையாவும், அக்கறையாவும் கண்ணை சோதிச்சாங்க. vision test பண்ணிட்டு, ஏதோ chemical இல்லேன்னா பூச்சி விழுந்துருக்கும், கவலைப்படத் தேவையில்லைன்னு
சொன்னாங்க. செவிலியைக் கூப்பிட்டு, ஒரு wash பண்ணிட்டு மருந்து போட்டு அனுப்பிவிடச் சொன்னாங்க. அவரும், பொறுமையா ஒரு power wash பண்ணி மருந்து போட்டு விட்டார். திரும்பும்போது, மருந்துகள் மாத்திரைகள் கொடுத்து காலை வரை பார்த்துவிட்டு, சரியாகலன்னா வந்து காண்பிக்கச் சொன்னாங்க. சரியாகிவிட்டது!

அரசு மருத்துவமனைகள்மேல் எத்தனையோ குற்றச் சாட்டுகள் இருந்தாலும், எனக்குக் கிடைத்த கவணிப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. மன்னார்குடியில் சின்ன வயதில் பார்த்த அந்த மிரட்டும் மருத்துவமனை இல்லை. சத்தம்போடும் செவிலிகள், ஏனோ தானோவென்ற மருத்துவர்களின் கவனிப்பும் இங்கில்லை. ஒரு வேளை கூட்டம் குறைவாக இருந்தால் உரிய கவனிப்பு கிடைக்குமோ என்னவோ? அவர்களும் உணர்ச்சியுள்ள மனிதர்கள்தானே?

செவிலிக்கு இந்தப் பதிவின் மூலம் நன்றி. இதே கவனிப்பை எல்லோருக்கும் அளிக்க வாழ்த்துகள்! அந்த இரண்டு பெண் மருத்துவர்களுக்கும், மகளிர் தினமான இன்று வாழ்த்துகளும் நன்றிகளும் கூறுவது மிகப் பொருத்தமானதாக இருக்கும். கர்ப்பமாய் இருக்கும் அந்த மருத்துவர் சுகப்பிரசவத்தின் மூலம் ஒரு நல்ல குடிமகனை/குடிமகளைப் பெற்றெடுக்கவும் மனமார்ந்த வாழ்த்துகள்!!

===

Friday, December 30, 2011

என்ன நடக்குது இதிலே?

இப்பத்தான் கொஞ்ச வருசங்களுக்கு முன்னே மார்க்கெட்டுக்கு வந்தது. இப்போ இதுக்கான மார்க்கெட் ரொம்ப பலமாவும், இன்னும் 10-15 வருஷங்களுக்குத் தாக்குப்பிடிக்கும் தொழில்நுட்பமாகவும் இருக்கிறது. வந்த புதிதில், பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே பயன் தரும் என்று நினைக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், ஒரே பெயரில் இரண்டு மூன்று மளிகைக் கடைகள் இருந்தால்கூட பயன்படுத்த ஏற்றது என்பது இதன் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம்!

இந்தத் தொழில்நுட்பம்தான் Data Warehouse and Business Intelligence (DW&BI). அடிப்படை தெரிந்துகொண்டால், இது ஒன்றும் பெரிய விஷமல்ல. எந்த விஷயங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்பதற்கு, நம் அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு செயலை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

நாம் ஒரு ATM க்கு செல்வதாக வைத்துக்கொள்வோம். என்ன மாதிரியான விஷயங்களுக்காக அங்கு செல்வோம்? பணம் எடுக்க, பணம் மாற்ற (transfer), Mini Account Statement எடுக்க, காசோலை deposit செய்ய மாதிரியான வேலைகளுக்குத்தான் அங்கு செல்வோம். இது சாதாரணமாக தொழில்நுட்ப மொழியில் சொன்னால் - Transactions. இந்த மாதிரி நடக்கும் transactions களை பதிவு செய்து வைத்துக் கொள்வது, OnLine Transaction Processing database (OLTP).

இப்போது நம் தேவைக்கு, கடந்த ஒரு வருடத்துக்கான account statement வேண்டும். நமக்கு 4-5 accounts இருப்பதாக வைத்துக்கொள்வோம். நாம் இதை ATM ல் பெற முடியாது. அதாவது OLTP database ல் அந்த விவரங்கள் இருக்காது. 

அல்லது, வங்கியின் தலைமையகத்தில் புதிதாக ஒரு loan offer or credit card offer கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு, வாடிக்கையாளர்களின் முழு விவரம் வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, வங்கியில் 2 க்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்திருக்கும், கடந்த 3 வருடங்களில் மாதத்துக்கு குறைந்தது 5 முறை பணம் deposit செய்யும், credit card இல்லாத, சென்னையில் வசிக்கும் வாடிக்கையாளர்களின் முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் வேண்டும். இந்த விவரத்தை, வங்கியில் உள்ள OLTP database ல் எடுக்க முடியாது. ஏனென்றால், இந்த database-ல் 1 வார காலம் அல்லது 1 மாத கால விவரங்கள்தான் இருக்கும். மேலும், இவ்வளவு விரிவான விவரங்களை அந்த database சேமித்து வைக்காது. இது வெறும் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பயன்பாடு மாறும்.

இந்த மாதிரி விவரங்களை தேவையான முறையில் நீண்ட காலத்துக்குச் சேர்த்து வைத்து, தேவையானபோது அளிக்கும் system தான் OLAP (OnLine Analytical Processing) database. இதுதான் Data Warehouse database (DW). இதிலிருந்து என்ன மாதிரி விவரங்கள் எடுக்கலாம், எப்படி எடுக்கலாம், எப்படி இந்த விவரங்களைக் கொண்டு வருங்காலத்தில் இன்னும் சிறப்பாகத் திட்டமிடலாம் (Decision Making), நஷ்டங்களைக் குறைக்கலாம் என்பதுதான் Business Intelligence (BI). அதாவது Data வை எப்படி எந்த விதத்தில் சேமிக்கலாம் என்பது Data Warehouse (DW) அந்த data வை எப்படி பயன்படுத்தலாம் என்பது Business Intelligence (BI). இது இரண்டும் எப்போதுமே ஒன்றாகத்தான் பயன்படுத்தப்படும். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை!

இந்த இரண்டு ஏரியாக்களிலும் பயன்படுத்த நிறைய மென்பொருள்கள் இருக்கின்றன. Informatica, IBM, SAP, MicroStrategy, Microsoft, Oracle போன்ற நிறுவனங்கள் இரண்டு ஏரியாக்களுக்குமான மென்பொருட்களைத் தயாரிக்கிறர்கள். வருங்காலத் தேவையைக் கவனத்தில் கொண்டு, மேலும் சில நிறுவனங்கள் இந்தத் துறையில் கால் வைக்கின்றன. இந்த மென்பொருட்களுக்கானத் தேவை, முன்பு பெரிய நிறுவனங்களுக்கு மட்டும்தான் என்றிருந்த நிலை, இப்போது சிறிய, நடுத்தர நிறுவனங்களும் இந்த மென்பொருட்களைப் பயன்படுத்தி நீண்டகாலப் பயன் பெறலாம் என்று மாறிவிட்டது. எனவே, இந்த மென்பொருட்கள் தெரிந்த software consultants/engineers க்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. இது வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, data எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் பயன்படும். ஒவ்வொரு வர்த்தக முறைக்கும் (domain) ஒவ்வொரு மாதிரி இந்த DW database ஐ வடிவமைக்கவேண்டும்.


எந்தெந்த வகையான வேலைகள் DW&BI ல் கிடைக்கும்?

- DW&BI Architect
- Data Modeler
- ETL Developer
- BI Developer
- Tester
- DW&BI Manager
- Business Analyst
- ETL/BI DBA
- Operator
- Production Support Executive

இந்த மாதிரி வேலைகள் தற்போதைக்கு அமெரிக்காவில் அதிகமாக இருக்கின்றன. UK & other European நாடுகளிலும், தேவைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்த வரை, consulting companies நிறைய வேலைவாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றன. Product based companies களில் கடந்த சில வருடங்களாக பிரகாசமான வேலைவாய்ப்புகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.


முக்கியமான மென்பொருட்கள் (DW):
- Informatica (Informatica Corporation)
- Data Stage (IBM)
- SSIS (Microsoft)
- Ab Initio
- ODI (Oracle)

முக்கியமான மென்பொருட்கள் (BI):
- MicroStrategy (MicroStrategy Corporation)
- Cognos BI (IBM)
- SSRS/SSAS (Microsoft)
- Business Objects (SAP)
- Hyperian (Oracle)

மேற்கண்ட மென்பொருட்களில் பயிற்சி பெற (அ) மேலும் விவரங்கள் தேவையெனில், கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

Axiom Semantics Technology Services (ASTS)
14 L.B Road, First Floor
Opp. Arihant E Park, Near Adyar signal
Adyar, Chennai - 20
Phone: 64558899, 9543322116, 9629529295
Email: info@axiomsemantics.com
Web: www.axiomsemantics.com

***

Wednesday, December 28, 2011

Autism - ஒரு நோயல்ல!

இப்போது பரவலாக கேள்விப்படும் ஒரு வார்த்தை - ஆட்டிசம் (Autism). இது ஒரு நோயல்ல, குழந்தையின் வளர்ச்சியில் ஒரு நிலை அல்லது ஒரு குறைபாடு எனச் சொல்லலாம். இந்த நிலை பற்றி பல்வேறு கருத்துகள் பல்வேறு டாக்டர்களால் சொல்லப்பட்டாலும், இதுதான் இந்தக் குறைபாட்டுக்குக்  காரணம் என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை.

இந்த  குறைபாடு உள்ள குழந்தைகள், மற்றக் குழந்தைகளை விட கீழ்கண்டவைகளில் வித்தியாசமாக இருப்பார்கள்;


1. படித்தல், பாடங்களைக் கவனித்தல்

2. வலியறிதல் (வலியே தெரியாது அல்லது சிறு வலிக்கும் பெரிதாக கத்துவார்கள்)

3. பயமின்மை

4. சொல்வதையே திருப்பிச் சொல்லுதல்

5. பார்த்த படங்களையே (அ) விளம்பரங்களை மறுபடி மறுபடி பார்த்தல்

6. அபார ஞாபகசக்தி

7. பிடிவாதம் பிடித்தல்

8. குறிப்பிட்ட சாப்பாடு மட்டும் சாப்பிடுதல் (அ) தவிர்த்தல்

9. தன்னைக் காயப்படுத்திக் கொள்ளுதல்

10. கேள்வி கேட்டால் பதில் கூறாமல் இருத்தல்

பொதுவாக, இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளை 2 வயதிலேயே கண்டுபிடித்து விடலாம். அதீத தெரபி மூலமும் சில மருந்துகள் மூலமும் இந்தக் குறைபாட்டைச் சரி செய்ய வாய்ப்பிருக்கிறது.

சமீபத்திய கணக்கின்படி, அமெரிக்காவில் சராசரியாக 100 ல் ஒரு குழந்தைக்கு இந்தக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4 ஆண்குழந்தைக்கு 1 பெண்குழந்தை என்ற அளவில் இது பாதிக்கிறது. என் நண்பர்களில் 3 பேரின் ஆண் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது. அந்த மூன்று குழந்தைகளும் அமெரிக்காவில் பிறந்தவர்கள். அவர்களின் அன்றாட போராட்டத்தை நான் அறிவேன். ஒரு பையன் ஷாப்பிங் செய்துகொண்டிருக்கும்போது, கடையிலிருந்து வெளியே ஓடிவிட்டான், கண் இமைக்கும் நேரத்தில். நண்பன் சுதாரித்துக்கொண்டு தேடினால் பையனைக் காணவில்லை. போலீசுக்கு போன் செய்து, கடையில் உள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து தேடி கடைசியில் 2.5 மைல் தூரத்தில் ரயில் போகும் தண்டவாளத்தில் நின்றவனைக் கண்டுபிடித்தார்கள். இன்னொரு நண்பனின் பையன், கொதித்துக்கொண்டிருந்த வென்னீரை அப்படியே இழுத்து வயிற்றில் கொட்டிக் கொண்டான்.

பெற்றோர்களின் பொறுமையை இந்தக் குழந்தைகள் ரொம்பவே சோதிப்பார்கள். ஷாப்பிங் சென்றால், கார் பார்க்கை விட்டு நகரமாட்டார்கள். ஒரு இடத்தில் நிற்கமாட்டார்கள், யாராவது சொன்னால் கேட்கமாட்டார்கள், அடித்தால் வலிக்காது, மேலும் ஆக்ரோஷமாக ஆகிவிடுவார்கள். பெருங்குரலெடுத்துக் கத்துவார்கள்.

இது மாதிரி அந்தப் பெற்றோர்களுக்கு கிடைக்கும் தினப்படியான அதிர்ச்சிகள், அனுபவங்கள் வேதனை தரக்கூடியவை. இதன் காரணமாகவே, அவர்கள் பெரும்பாலும் யாரோடும் ஒட்டுவதில்லை. எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. நாங்கள் ஒரு குறிப்பிட்ட சில நண்பர்கள் வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே வீட்டுக்கு வருவார்கள். இந்த மாதிரிக் குழந்தைகளுக்குத் தேவை நமது பரிதாபமோ அல்லது அறிவுரையோ அல்ல. சிறிய புன்னகை மற்றும் நிறைய பொறுமையும் அன்பும்.

இந்தக் குறைபாடு உள்ள பெரும்பாலான குழந்தைகள், ஏதாவது ஒரு தனித்திறமையைக் கொண்டிருப்பார்கள். என் நண்பனின் பையன் அபார ஞாபக சக்தி கொண்டவன். அமெரிக்காவில் உள்ள எல்லா மாநிலங்களையும் அதன் தலைநகரோடு சொல்லுவான். மாநிலத்தின் பேரைச் சொன்னால் அந்த மாநிலத்தின் பேஸ்பால் அணியின் பெயரைச் சொல்லுவான். இன்னொரு நண்பரின் பையன் மிக அருமையாக ஓவியம் வரைவான்.


அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில், இந்தக் குழந்தைகளுக்கென சிறப்பு பள்ளிகள் உள்ளன. அங்கு, இவர்களுக்கு தனித்த கவனம், தனித்தன்மையோடு தயாரிக்கப்பட்ட பாட திட்டங்கள், பெற்றோருக்கென்று கலந்துரையாட குழுமங்கள் இருக்கின்றன. இந்தியாவில், இது பற்றி சரியான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.

இந்தக் குறைபாட்டுக்குக் காரணமாக இதுவரை இரண்டு விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று சிறு வயதில் போடப்படும் நோய்த்தடுப்பூசிகள். மற்றொன்று, ஜீன் குறைபாடு. இதில், நோய்த்தடுப்பூசிகளால்தான் இந்தக் குறைபாடு என்பது சரியாக நிரூபிக்கப்படவில்லை. ஜீன் மாற்றங்கள்தான் என்று பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன.

சமீபத்தில் ஒரு டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நமது குடும்ப சமூக அமைப்புதான் இதற்குக் காரணம் என்று கூறினார். பொதுவாக, குழந்தைகளை மற்றக் குழந்தைகளோடு விளையாட விடுவதில்லை, கற்றுக்கொடுத்தல் குறைவாக இருக்கிறது என்பது போல் சொன்னார். என்னால் முழுமையாக இதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏனென்றால், என் 3 நண்பர்களில், இருவர் நண்பர்கள், உறவினர்களிடம் நன்றாகக் கலப்பவர்கள். இன்னொரு நண்பர் பெரும்பாலான நேரங்களில் எதையாவது குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பார்.

என்னைப் பொறுத்தவரை நான் காரணமாக நினைப்பது, மாறி வரும் நமது உணவுப்பழக்கங்கள்தான். இப்போது நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப்பொருட்கள் பதப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. பெரும்பாலும், மரபணு மாற்றப்பட்டவையாக இருக்கின்றன. இதனால்தான் இந்தக் குறைபாடு என்று நிச்சயமாகக் கூறமுடியாவிட்டாலும், சமீப காலங்களில் அதீத மாற்றம் கண்டது, சுற்றுப்புறமும் உண்ணும் உணவுப்பொருட்களும்தான். 20 வருடங்களுக்கு முன், யாருக்காவது புற்றுநோய் என்றால் அவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும். இப்போதெல்லாம், அது எந்தவகை புற்றுநோய் என்று சர்வ சாதாரணமாகக் கேட்கும் அளவிற்கு போய்விட்டது. உணவு முறைகளும், சுற்றுப்புறச் சூழலும் காப்பாற்றப்படாவிட்டால், இந்த மாதிரி புதுசு புதுசாக நோய்களும் வந்துகொண்டுதான் இருக்கும்.

Autism பற்றிய மேலதிக தகவல்களுக்கு ;

  •     http://www.autism-india.org/index.html
  •     www.autismspeaks.org
  •     www.cdc.gov
  •     http://www.ucdmc.ucdavis.edu/mindinstitute/
  •     http://archpsyc.ama-assn.org/cgi/content/full/archgenpsychiatry.2011.76

***

Tuesday, December 27, 2011

What a rubbish world?

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன். நான் சின்ன வயதில் ஆட்டம் போட்ட ஆறு, பிளாஸ்டிக் கழிவுகளால் பாதி நிரம்பி இருந்தது. ஆற்றில் நீர் வரும் காலத்தில் இப்போதெல்லாம் யாரும் இறங்குவது இல்லையாம். பொங்கலுக்கு பொங்கல், மாடுகளைக் குளிப்பாட்டுவதும், பக்கத்தில் இருக்கும் காட்டாற்றில் வண்டிகளைக் கழுவுவதும் இப்போது மறைந்து விட்டது. தெரிந்தும் தெரியாமலும், பிளாஸ்டிக் அரக்கன் பிடியில் நாமும் விழுந்து விட்டோம்.

பிள்ளைகளோடு ஃப்ளோரிடா டிஸ்னி உலகம் சென்றிருந்தபோது, பார்க்கும் ஒவ்வொருவர் கையிலும், ஒரு பெரிய கடின ப்ளாஸ்டிக் கப், அதற்கு மேல் மூடி, ஒரு ஸ்ட்ரா. இது சும்மா ஒரு பானத்துக்கு மட்டும்தான். சராசரியாக ஒரு 10 வயது பிள்ளை ஒரு நாளைக்கு 4 பானங்கள் குடித்தால், குடித்து விட்டு குப்பைகளை எறிந்தால், எவ்ளோ ப்ளாஸ்டிக் குப்பை? பணியாட்களும் அசராமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்தபடியே இருக்கின்றனர். ஒரு கணக்குப்படி, அந்த பூங்காக்களில் மட்டும் ஒரு நாளைக்கு 1,20,000 பவுண்ட்ஸ் (கிட்டத்தட்ட 56 டன்) குப்பை சேர்கிறதாம். அதில் கண்டிப்பாக ஒரு பெரும்பங்கு ப்ளாஸ்டிக் ஆக இருக்கும். இவ்வளவையும் என்ன செய்கிறார்கள்? Land Fill எனப்படும் குப்பை மேடுகளுக்குத்தான் கொண்டு செல்கிறார்கள். பள்ளமாக இருக்கும் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டி, மேடு படுத்துவதுதான் இது. அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் கண்ணுக்குக் குப்பை தெரியவில்லையென்பதால், அந்த நாடுகள் சுத்தமான நாடுகள் என்று ஒரு பொதுப்பார்வை இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுமே Land Fill செய்து Land Reclaim தான் செய்கிறார்கள். ஆக, குப்பைகள் அழிக்கப்படவில்லை, மறைக்கப்படுகிறது.



சமீபத்தில், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மாலுக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள சாப்பிடும் இடத்தில் (Food Court) இருந்த ஒரு கடையில் பிள்ளைகளுக்கு பழக்கூழ் (Smoothie) வாங்கினோம். அங்கு அமர்ந்து சாப்பிடத்தான் வாங்கினோம். அதற்கு அந்தக் கடையில், ஒரு ப்ளாஸ்டிக் கடின கப், ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன், கடின மூடி, ஒரு ஸ்ட்ரா எனக் கொடுத்தார்கள். நான், கடையில் இருப்பவரிடம், நாங்கள் இங்குதான் சாப்பிடப்போகிறோம், மூடி வேண்டாம் என்று கூறிவிட்டேன். அப்படியே, அவரிடம் ப்ளாஸ்டிக் கப்புகளுக்கும், பவுல்களுக்கும் பதில் பீங்கானில் குடுக்கலாமே. வெளியில் எடுத்துச் செல்வதானால், ப்ளாஸ்டிக்கில் கொடுங்கள் என்று கூறினேன். அவர் என்னை ஒரு விநோத பூச்சியைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, ஒரு சிரிப்போடு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

பிரபல உணவகங்களில், எடுப்புச் சாப்பாடு (Parcel) வாங்கினால் அதற்குக் கொடுக்கபடும் கடின ப்ளாஸ்டிக் கப்புகளைப் பார்த்தால் மனதுக்குச் சங்கடமாக இருக்கிறது. முன்பெல்லாம், ஒரு வாழை இலை, ஒரு செய்தித்தாள், கொஞ்சம் நூலோடு முடித்து விடுவார்கள். அதேபோல் தேநீர்க் கடைகள், மதுக்கடைகள் எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் கப்புகள். ஒரு மணி நேரத்தில் குடித்துத் தீர்க்கக்கூடிய தண்ணீருக்கு ஓராயிரம் ஆண்டுகள் அழிய எடுத்துக்கொள்ளும் ப்ளாஸ்டிக் பாட்டில். வயிற்றைக் கெடுக்கும் பூச்சிமருந்துகளுக்கு, உலகைக் கெடுக்கும் ப்ளாஸ்டிக் பாட்டில்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில், ப்ளாஸ்டிக்கால் ஏற்படும் அழிவுகளைப் பார்த்துவிட்டு, அதன் உபயோகத்தைக் குறைக்க பெரும்பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். நாம், இப்போதுதான் ப்ளாஸ்டிக்கை முழுவீச்சில் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறோம். ஆறுதலாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை நகரங்களில் ப்ளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்து இருக்கிறார்கள். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு, அலுவலகத்துக்கு கீழே இருக்கும் நாயர், காகிதக் கப்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

நாகரீக வளர்ச்சி, ஆரோக்கியம் காரணமாக நம் வாழ்க்கை முறை நிறைய மாறி விட்டது. நிறைய விஷயங்களை நாம் ஒரு சமரசத்தோடு ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். ஆனால், வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்தால், நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து வளர்க்கும் பிள்ளைகளோ அல்லது அவர்களின் பிள்ளைகளோ கொஞ்சம் அதிக நாட்கள் குறைந்த நச்சோடு வாழ்வார்கள்.

1. பார்க்கும், பொருள் வாங்கும் கடைகளில் ப்ளாஸ்டிக் பைகளை மறுப்பது.
2. உணவகங்களில் சென்று சாப்பிடுவது
3. தெரிந்த கடைகளில் சொல்லி ப்ளாஸ்டிக் பைகள் உபயோகத்தைக் குறைக்கச் செய்வது
4. குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் மட்டும் போடுவது என முயற்சி செய்யலாம்.

இன்று காலை என் மகள் ரொட்டி வாங்கிக்கொண்டு வரும்போது சொன்னாள். 'இந்த ஒரு ரொட்டிக்கும் ப்ளாஸ்டிக் பை எடுத்து திணிக்கிறாங்கப்பா, நான் வேணாம்னுட்டேன்' என்று. பெருமையாக இருக்கிறது, என் பேச்சை குறைந்த பட்சம் இரண்டு பேர் (மனைவி உள்பட) கேட்டு, ப்ளாஸ்டிக்கை முடிந்தவரை மறுக்கிறார்கள் என்பதை அறியும்போது!

மாற்றம் என்பது நமது வீடுகளில் இருந்தே ஆரம்பிக்கிறது. மாறுவோம், வருங்கால நமது சந்ததியினருக்குப் பொருள் மட்டுமல்லாது, சுத்தமான காற்று மற்றும் பூமியைச் சேர்த்து வைப்போம். பிளாஸ்டிக்கை முடிந்தவரை மறுப்போம்!

***

தண்ணியடிச்சுட்டு கார் ஓட்டுறது தப்பா?

எச்சரிக்கை - நான் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு தாறுமாறாக வண்டி ஓட்டுபவர்களுக்கு ஆதரவானவன் இல்லை.

ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு நாள் சாயந்தரம் வழக்கம்போல, செந்தில் மாப்ள ஆஃபிசில் சந்திப்பு. லைட்டா கொஞ்சம் டைட்டாவலாம்னு
ஆளுக்கு ஒன்னரை பியர் சாப்பிட்டோம். நான் பொதுவாக பியர் சாப்பிடுவதில்லை. 8 மணிக்கு சாப்பிட்டு விட்டு, 12:30 மணி வாக்கில் பெருங்குடியில் நான் தங்கியிருந்த வீட்டுக்குச் செல்ல காரில் கிளம்பினேன். கொஞ்சமாக மழை. மத்திய கைலாசத்திலிருந்து வலது பக்கம் திரும்புவதற்காக பச்சை விளக்குக்குக் காத்திருந்தேன். எனக்கு முன் ஒரு மினி லாரி, பக்கத்தில் ஒரு பைக். அவர்கள் முன் சில வண்டிகள். வலது பக்க சிக்னல் கிடைத்ததும் நகர ஆரம்பித்தோம். திரும்பும் வேளையில், பச்சை பார்த்துதான் திரும்பினேன். ஒரு நொடி நேரத்தில், பச்சை அம்பைக் காணோம்! திரும்பியவுடன் அங்கிருந்த இரு காவலர்கள் எங்கள் மூவரையும் நிறுத்தச் சொன்னார்கள்.

நான் காரை ஓரம் கட்டிவிட்டு காத்திருக்க, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பெயர்கொண்ட காவலர் என்னிடம் வந்தார். லைசன்ஸ், ரெஜிஸ்ட்ரேஷன்
கேட்டார், கொடுத்தேன். சிவப்பு சிக்னல்ல திரும்புனது தப்புன்னு சொன்னார். நான், திரும்பும்போது பச்சைதான் இருந்தது, கண்ணிமைக்கும் நேரத்தில்,
எந்த அறிகுறியும் (ப்ளிங்க்) இல்லாம சிவப்பு மாறுனா நான் என்ன சார் செய்யட்டும்னு கேட்டேன். அவர் அதெல்லாம் முடியாது, நாளைக்கு கோர்ட்டில் வந்து ஃபைன் கட்டுங்கன்னு சொன்னவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, 'நீங்க குடிச்சுருக்கீங்களா சார்'ன்னு கேட்டார். நானும், திடீர்
அரிச்சந்திரன் அவதாரம் எடுத்து, ஆமா, எட்டு மணிக்கு பியர் சாப்பிட்டேன்ன்னு சொன்னேன். அவர், சரி இன்னிக்கு வசமா சிக்கிட்டான் ஒருத்தன்னு நெனச்சுகிட்டு, சார் கொஞ்சம் இறங்கி வாங்க, இன்ஸ்பெக்டர்கிட்ட பேசணும்னு சொன்னார். நானும் இறங்கி இன்ஸ்பெக்டரிடம் போனேன்.

புகழ்பெற்ற குதிரையின் ஓனரான மாவீரன் பெயர் கொண்ட அவர், சார் குடிச்சுட்டு கார் ஓட்டக்கூடாது. நீங்க ஓட்டிகிட்டு வந்துருக்கீங்க. என்ன
செய்யலாம்னு கேட்டார். நான், அய்யா நான் எட்டு மணிக்குதான் பியர் சாப்பிட்டேன், அது அப்போவே பாத்ரூமுக்குப் போயிடுச்சு. காவலர் கேட்டாரு, நான் ஆமான்னு சொன்னேன்னு அவர்கிட்டே சொன்னேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்னு சொன்னேன். அவர் விடுவதாயில்லை. பைக் தம்பியையும், மினி லாரி தம்பியையும், சரிப்பா இப்ப என்ன சொல்றீங்க, 2000 ரூப தண்டம் கட்டவேண்டி வரும் பரவாயில்லையான்னு கேட்டார்.
அவங்க ரெண்டு பேரும் கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க.

என்னை தனியே கூப்பிட்ட பாகிஸ்தான் அதிபர், சார் பாத்தா(?) படிச்சவர் மாதிரி இருக்கீங்க. எதுனா பாத்து செய்ங்க. நீங்க பிரச்சினை இல்லாம
போயிடலாம்னு பேரத்தை ஆரம்பிச்சார். நான் அப்போதான் அமெரிக்க ரிட்டர்ன்ங்குறதால, லஞ்சம் குடுக்கக்கூடாது எனும் என் கொள்கையை உடும்பா புடிச்சுகிட்டு, சார் நான் லஞ்சமெல்லாம் குடுக்கமாட்டேன்னு சொன்னேன். உடனே அவர் மாவீரன்கிட்டே போய் ஏதோ சொன்னார். அவர், மத்த ரெண்டு பேரையும் பாத்து, சரி நீங்க சரிவர மாட்டீங்கன்னு சொல்லிட்டு, கேஸ் குறிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு, என்ன கோபம்ன்னா, நான் திரும்பும்போது பச்சை இருந்தது. ஒரு செகண்ட்குள்ளே, அது காணாமப் போச்சு. ரெண்டு செகண்ட்குள்ளே எப்படி அந்த சந்திப்பில் வண்டியத் திருப்புறது. அதனாலே, நான் திரும்பும்போது பச்சைதான் இருந்தது, சிக்னலில் கோளாறுன்னு வாதம் பண்ண ஆரம்பிச்சேன். அவங்க அதெல்லாம் காதுலயே போட்டுக்கல.

நானும், சரி இவங்ககிட்டே பேசி பிரயோசனம் இல்லன்னுட்டு, மாவீரன் கிட்டே, சட்டப்படி என்ன பண்ணனுமோ அதப் பண்ணிடுங்க, லஞ்சம்
குடுக்கமாட்டேன்னு சொன்னேன். அவரும் (கிண்டலா) சரி அப்படியே பண்ணிடுவோம்னு சொல்லி அதிபரையும் எங்க மூனு பேரையும் ராயப்பேட்டை அரசாங்க மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். நானும், சரி என்னதான் ப்ரோசிஜர்ன்னு பாத்துடலாம்னு ஆர்வத்தில் கெளம்பிட்டேன். இவ்வளவுக்கும், ஒரு 500 ரூபாய் (அதான் அவங்க கேட்டது) இல்லேன்னா, அப்போ இருந்த ஒரு சக்தி வாய்ந்த அமைச்சர், அல்லது முதலமைச்சர் செல்லில் இருந்த ஒரு காவல் அதிகாரி இவங்க யாராவது ஒருத்தர் பேரச் சொல்லிட்டு போயிருக்க முடியும். ஆனால், எனக்கு அப்படிச் செய்ய மனமில்லை. தவிரவும், நம்மூர் சட்டங்கள் எப்படி இருக்கின்றனன்னு நேரடியா பார்க்க ஒரு வாய்ப்பை விட மனசில்லை. குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை, அதனால் இன்னும் தைரியம்!!

ஒரு ஷேர் ஆட்டோவில் எங்களை ஏத்திகிட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போனார் அதிபர். வரும் வழியெங்கும், மத்த ரெடு பேரும் கெஞ்சி கெஞ்சி அலுத்துப்போயிட்டாங்க. அங்கு போனதும், பணியில் இருந்த சின்னக்குயில் பேர் கொண்ட (பயிற்சி) டாக்டரிடம் அழைத்துப்போனார். அந்தம்மாவுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:

சின்னக்குயில் - உங்க பேரு
நான் - ராஜா
சி.கு - அப்பா பேரு
நான் - சொன்னேன்
சி.கு - அட்ரஸ்
நான் - சொன்னேன்
சி.கு - குடிச்சிருக்கீங்களா
நான் - எட்டு மணிக்கு பியர் சாப்பிட்டேன் (அப்போ மணி 1:30am)

அதுக்கு அப்புறம் ஒரு சீட்டில் ஏதோ எழுதியது சி.கு. சரி நீங்க போகலாம்னு சொன்னிச்சு. எனக்கு ஒன்னும் புரியல. அந்த சீட்டுல என்ன எழுதியிருக்கீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவங்க, நீங்க driving under the influence of alcohol க்கு மருத்துவர் சான்று குடுத்திருக்கேன்னாங்க. எனக்கு கோபம் தலைக்கேறிடுச்சு. எத வச்சு கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டேன். நீங்கதான் சொன்னீங்க குடிச்சுருக்கேன்ன்னு அத வச்சுதான்ன்னு சொன்னாங்க. 8 மணிக்கு ஒன்னரை பியர் சாப்பிட்டுட்டு 12:30 மணிக்கு காரை மறைக்கும்போது என் ரத்தத்துல எவ்வளவு பர்சென்ட் ஆல்கஹால்
இருக்கும்னு கேட்டேன். எனக்கு என்ன டெஸ்ட் எடுத்து கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டா, சி.கு நாங்க டெஸ்டெல்லாம் எடுக்குறது இல்ல, உங்க கண்ணு
சிவப்பா இருக்கு, தவிர நீங்கதான் சொன்னீங்க குடிச்சுருக்கேன்ன்னு அத வச்சுதான்னு சொன்னுச்சு. நான் சரி, இப்போ நான் குடிக்கலன்னு சொல்றேன், அதையும் நம்புவீங்களான்னு கேட்டேன். அதுக்கு சி.கு சார் அதெல்லாம் எனக்குத் தெரியாது, போலிஸ்காரங்க கூட்டிட்டு வருவாங்க, நாங்க டாக்டர் செர்டிஃபிகேட் குடுப்போம், அவ்வளவுதான் எனக்குத் தெரியும்னு சொல்லிச்சு. எனக்கு அழுகுறதா சிரிக்கிறதான்னு தெரியல. சரி தொலைங்கன்னுட்டு வெளில வந்துட்டேன். மறுபடியும் மாவீரன்கிட்டே அழைத்து வரப்பட்டோம். சார், சட்டப்படி நான் என்ன செய்யனுமோ செஞ்சுட்டேன். படிச்சவரா இருக்கீங்க, சட்டப்படி நான் கார் குடுக்கக்கூடாது, நீங்க எடுத்துகிட்டுப் போங்க 2200 ரூபாய் தண்டம் கட்ட வேண்டி வரும்.குடுத்துட்டுப் போங்க, உங்க லைசென்சையும் குடுத்துட்டு நாளைக்கு மயிலாப்பூர் ஸ்டேஷன்ல வந்து லைசன்ஸ வாங்கிகோங்கன்னு சொன்னார்.

இதுக்கு இடையில், அங்கு வந்த என் மச்சான் (அவன் தாய்மாமன்தான் போலிஸ் அதிகாரி), அங்கிள், ஒரு போன் மாமாவுக்கு போட்டிருக்கலாம்ல,
இல்லன்னா 500 ரூபா வீசி எறிஞ்சு இருக்கலாமே, ஏன் இப்படி இந்த மழையில அலையிறீங்கன்னு கேட்டான். நான் சும்மாதான், நம்ம சிஸ்டமும்
சட்டமும் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கதான்னு சொல்லிட்டு காரை எடுத்துகிட்டு வீடு போய் சேர்ந்தேன்.

அடுத்த நாள், செந்தில் மாப்ளைய கூட்டிகிட்டு ஸ்டேஷன் போனேன். அவன் போகும் வரை ஒரே திட்டு. எனக்கு போன் பண்ணியிருக்கலாம்ல.
இந்தியாவுக்கு வந்துட்டா இந்தியன் மாதிரி இருக்கக் கத்துக்கோடான்னு ஒரே அட்வைஸ்! மாவீரன், எங்களுக்கு முதுகைக் காட்டிகிட்டு நின்னுகிட்டு இருந்தார். திரும்பி என்னைப் பார்த்து டக்குன்னு என்ன நெனைச்சாரோ ஒரு சல்யூட் வச்சார், எனக்கு ஒரே சிரிப்பு. சரி வாங்க சார்ன்னு மேலே ரூமுக்கு கூட்டிகிட்டுப் போனார். உக்காரச் சொல்லிவிட்டு, செந்திலிடம் பேச ஆரம்பித்தார். செந்தில், சார் இவன் நெனச்சுருந்தா, நேத்தே ஒன்னும் பிரச்சினை இல்லாம வீடு போயிருக்க முடியும். கொஞ்சம் நேர்மையான ஆளுன்னு என்னைப் பத்தி சொல்ல ஆரம்பித்தான். உடனே அவர், அடடா சார் நேத்தே என்கிட்ட சொல்லியிருக்கலாமே, ஏன் சார் இப்படிப் பன்னிட்டீங்க, சாரி சார்ன்னு ஆரம்பிச்சுட்டார். நான் பரவாயில்ல, சும்மா சட்டம் தெரிஞ்சுக்கதான் அப்படிப் பண்ணேன்னு சொன்னேன். அவருக்கு அப்ப ஒரு போன் வந்தது.

கொஞ்சம் நேரம் பேசிட்டு, ஸ்பீக்கரில் போட்டுவிட்டார். மறுமுனையில் பேசியது அவருக்கு மூத்த அதிகாரி, என்னய்யா எத்தன Drunken Driving கேசு
புடிச்சீங்க, 30 டார்கெட் வச்சுருக்கானுங்க. முடியுமில்லன்னு கேட்டார்.
பேசி முடிச்சதும் மாவீரன், பாருங்க சார் மேலேயிருந்து எங்க உயிர எடுக்குறாங்க. நாங்க யாரையும் புடிக்கிறது இல்ல. கணக்கு காட்ட சில சமயம்
கடுமையா நடந்துக்கவேண்டியிருக்கு. ஒரு ரகசியம் சொல்லவா, நாங்க பெரும்பாலும் புடிக்கிறது சென்னை பதிவு எண் கொண்ட வண்டிகளை
அல்லன்னு சொன்னார்!! (என்னோட கார் நம்பர் TN 48). சார் தப்பா நெனச்சுக்கதீங்க, கேஸ் ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். அதனாலே கேன்சல்
பண்ணமுடியாது. ஃபைனை நானே கட்டிட்டு உங்களுக்குத் தகவல் சொல்றேன்னு சொன்னார். அடக்கொடுமையேன்னுட்டு, நாங்களும் கெளம்பி
வந்துட்டோம்!

அமெரிக்காவில் குடித்து விட்டு வண்டி ஓட்டினால் தண்டனை கடுமையாக இருக்கும். ஆனால், ஒரு ட்ரைவரை அந்தக் கேசுக்காக பிடிக்கும் முன்
ஏகப்பட்ட நடைமுறைகள். முதலில், வேறு ஏதாவது காரணுத்துக்காக வண்டி மறிக்கப்பட்டிருக்கவேண்டும். உதாரணத்துக்கு, காரை தாறுமாறாக
ஓட்டுதல், அதிக வேகத்தில் போதல், இந்த மாதிரி. காரை விட்டு கீழிறக்கி (இதுக்கு மட்டும்தான் கீழே இறங்கவேண்டும், மத்த சமயங்களில் ட்ரைவர்
சீட்டிலேயே இருக்கவேண்டும், கீழே இறங்கினால், அதிகாரியைத் தாக்கத்தான் வருகிறோம்ன்னு ஒரு தவறான புரிதல் அதிகாரிக்கு வந்திடும்)
ட்ரைவரிடம் Breathalyzer சோதனை செய்யப்பட்டு, அவர் ரத்தத்தில் 0.8% க்கு அதிகமாக ஆல்கஹால் இருந்தால் மட்டுமே (இது மாநிலத்துக்கு
மாநிலம் மாறும்) அவரை புக் செய்யவேண்டும். அதுக்கு அப்புறம் அவரை வண்டியோட்ட அனுமதிக்கக்கூடாது. உடனே அருகில் இருக்கும்
மருத்துவமனையில் ஆல்கஹால் அளவு ரத்த சோதனை செய்து உறுதி செய்யப்படவேண்டும். இவை எல்லாம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டால்தான் தண்டனை கிடைக்கும். அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடிப்பவர்கள். வேலை முடிந்தவுடன் நிறைய தடவைகள் நேரே பார் போயிருக்கிறோம். பெரும்பாலும் பியர் அல்லது ரெட் வைன் சாப்பிட்டுவிட்டு நன்றாக சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, நிறைய பேசிவிட்டு நிதானமாகத்தான் வீடு திரும்புவோம். இது வரை நான் ஸ்பீடிங் தவிர வேறு எதற்காகவும் தண்டிக்கப்பட்டதில்லை!

நம்மூரில், முதலில் சிக்னல்கள் ஒரு ஒழுங்கில் அமைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு சந்திப்புக்கும் ஒரு மாதிரி சிக்னல்கள். அதுவும் இடது, வலது
புறம் திரும்புவதற்கு சில ப்ளிங்க் ஆகி நிற்கும், சில இடங்களில் எப்போது போகும் என்பது தெரியாது. அதே மாதிரி, ரத்தத்தில் ஆல்கஹால் அளவு
என்பது கட்டாயமாக பரிசோதிக்கப்படவேண்டும். சும்மா, சென்னை தவிர்த்த ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்களைப் பிடித்தோ, சிபாரிசுக்கு ஆளில்லாதவர்களைப் பிடித்தோ வெறும் கணக்கு காட்டக் கூடாது. சிக்னலை மீறுபவர்கள், (இரவில்) தாறுமாறாக வண்டி ஓட்டுவோர் மட்டும் பிடிக்கப்பட்டு ரத்தசோதனையோ அல்லது மூச்சு சோதனையோ செய்யவேண்டும். இதெல்லாம் இல்லாமல், இருக்கும் சிஸ்டத்தை தொடர்ந்து ஃபாலோ செய்தால், சட்டத்தை மதித்து நடக்க விரும்பும் என்னைப் போல் பலரும், 500 ரூபாயையோ அல்லது சிபாரிசுக்கு நம்பரையோ தயாராக வைத்துக்கொண்டுதான் இனி ரோட்டில் செல்லவேண்டும்!

***