Friday, December 30, 2011

என்ன நடக்குது இதிலே?

இப்பத்தான் கொஞ்ச வருசங்களுக்கு முன்னே மார்க்கெட்டுக்கு வந்தது. இப்போ இதுக்கான மார்க்கெட் ரொம்ப பலமாவும், இன்னும் 10-15 வருஷங்களுக்குத் தாக்குப்பிடிக்கும் தொழில்நுட்பமாகவும் இருக்கிறது. வந்த புதிதில், பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே பயன் தரும் என்று நினைக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், ஒரே பெயரில் இரண்டு மூன்று மளிகைக் கடைகள் இருந்தால்கூட பயன்படுத்த ஏற்றது என்பது இதன் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம்!

இந்தத் தொழில்நுட்பம்தான் Data Warehouse and Business Intelligence (DW&BI). அடிப்படை தெரிந்துகொண்டால், இது ஒன்றும் பெரிய விஷமல்ல. எந்த விஷயங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்பதற்கு, நம் அன்றாட வாழ்வில் நடக்கும் ஒரு செயலை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

நாம் ஒரு ATM க்கு செல்வதாக வைத்துக்கொள்வோம். என்ன மாதிரியான விஷயங்களுக்காக அங்கு செல்வோம்? பணம் எடுக்க, பணம் மாற்ற (transfer), Mini Account Statement எடுக்க, காசோலை deposit செய்ய மாதிரியான வேலைகளுக்குத்தான் அங்கு செல்வோம். இது சாதாரணமாக தொழில்நுட்ப மொழியில் சொன்னால் - Transactions. இந்த மாதிரி நடக்கும் transactions களை பதிவு செய்து வைத்துக் கொள்வது, OnLine Transaction Processing database (OLTP).

இப்போது நம் தேவைக்கு, கடந்த ஒரு வருடத்துக்கான account statement வேண்டும். நமக்கு 4-5 accounts இருப்பதாக வைத்துக்கொள்வோம். நாம் இதை ATM ல் பெற முடியாது. அதாவது OLTP database ல் அந்த விவரங்கள் இருக்காது. 

அல்லது, வங்கியின் தலைமையகத்தில் புதிதாக ஒரு loan offer or credit card offer கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு, வாடிக்கையாளர்களின் முழு விவரம் வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, வங்கியில் 2 க்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்திருக்கும், கடந்த 3 வருடங்களில் மாதத்துக்கு குறைந்தது 5 முறை பணம் deposit செய்யும், credit card இல்லாத, சென்னையில் வசிக்கும் வாடிக்கையாளர்களின் முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் வேண்டும். இந்த விவரத்தை, வங்கியில் உள்ள OLTP database ல் எடுக்க முடியாது. ஏனென்றால், இந்த database-ல் 1 வார காலம் அல்லது 1 மாத கால விவரங்கள்தான் இருக்கும். மேலும், இவ்வளவு விரிவான விவரங்களை அந்த database சேமித்து வைக்காது. இது வெறும் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பயன்பாடு மாறும்.

இந்த மாதிரி விவரங்களை தேவையான முறையில் நீண்ட காலத்துக்குச் சேர்த்து வைத்து, தேவையானபோது அளிக்கும் system தான் OLAP (OnLine Analytical Processing) database. இதுதான் Data Warehouse database (DW). இதிலிருந்து என்ன மாதிரி விவரங்கள் எடுக்கலாம், எப்படி எடுக்கலாம், எப்படி இந்த விவரங்களைக் கொண்டு வருங்காலத்தில் இன்னும் சிறப்பாகத் திட்டமிடலாம் (Decision Making), நஷ்டங்களைக் குறைக்கலாம் என்பதுதான் Business Intelligence (BI). அதாவது Data வை எப்படி எந்த விதத்தில் சேமிக்கலாம் என்பது Data Warehouse (DW) அந்த data வை எப்படி பயன்படுத்தலாம் என்பது Business Intelligence (BI). இது இரண்டும் எப்போதுமே ஒன்றாகத்தான் பயன்படுத்தப்படும். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை!

இந்த இரண்டு ஏரியாக்களிலும் பயன்படுத்த நிறைய மென்பொருள்கள் இருக்கின்றன. Informatica, IBM, SAP, MicroStrategy, Microsoft, Oracle போன்ற நிறுவனங்கள் இரண்டு ஏரியாக்களுக்குமான மென்பொருட்களைத் தயாரிக்கிறர்கள். வருங்காலத் தேவையைக் கவனத்தில் கொண்டு, மேலும் சில நிறுவனங்கள் இந்தத் துறையில் கால் வைக்கின்றன. இந்த மென்பொருட்களுக்கானத் தேவை, முன்பு பெரிய நிறுவனங்களுக்கு மட்டும்தான் என்றிருந்த நிலை, இப்போது சிறிய, நடுத்தர நிறுவனங்களும் இந்த மென்பொருட்களைப் பயன்படுத்தி நீண்டகாலப் பயன் பெறலாம் என்று மாறிவிட்டது. எனவே, இந்த மென்பொருட்கள் தெரிந்த software consultants/engineers க்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. இது வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, data எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் பயன்படும். ஒவ்வொரு வர்த்தக முறைக்கும் (domain) ஒவ்வொரு மாதிரி இந்த DW database ஐ வடிவமைக்கவேண்டும்.


எந்தெந்த வகையான வேலைகள் DW&BI ல் கிடைக்கும்?

- DW&BI Architect
- Data Modeler
- ETL Developer
- BI Developer
- Tester
- DW&BI Manager
- Business Analyst
- ETL/BI DBA
- Operator
- Production Support Executive

இந்த மாதிரி வேலைகள் தற்போதைக்கு அமெரிக்காவில் அதிகமாக இருக்கின்றன. UK & other European நாடுகளிலும், தேவைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்த வரை, consulting companies நிறைய வேலைவாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றன. Product based companies களில் கடந்த சில வருடங்களாக பிரகாசமான வேலைவாய்ப்புகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.


முக்கியமான மென்பொருட்கள் (DW):
- Informatica (Informatica Corporation)
- Data Stage (IBM)
- SSIS (Microsoft)
- Ab Initio
- ODI (Oracle)

முக்கியமான மென்பொருட்கள் (BI):
- MicroStrategy (MicroStrategy Corporation)
- Cognos BI (IBM)
- SSRS/SSAS (Microsoft)
- Business Objects (SAP)
- Hyperian (Oracle)

மேற்கண்ட மென்பொருட்களில் பயிற்சி பெற (அ) மேலும் விவரங்கள் தேவையெனில், கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

Axiom Semantics Technology Services (ASTS)
14 L.B Road, First Floor
Opp. Arihant E Park, Near Adyar signal
Adyar, Chennai - 20
Phone: 64558899, 9543322116, 9629529295
Email: info@axiomsemantics.com
Web: www.axiomsemantics.com

***

Wednesday, December 28, 2011

Autism - ஒரு நோயல்ல!

இப்போது பரவலாக கேள்விப்படும் ஒரு வார்த்தை - ஆட்டிசம் (Autism). இது ஒரு நோயல்ல, குழந்தையின் வளர்ச்சியில் ஒரு நிலை அல்லது ஒரு குறைபாடு எனச் சொல்லலாம். இந்த நிலை பற்றி பல்வேறு கருத்துகள் பல்வேறு டாக்டர்களால் சொல்லப்பட்டாலும், இதுதான் இந்தக் குறைபாட்டுக்குக்  காரணம் என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை.

இந்த  குறைபாடு உள்ள குழந்தைகள், மற்றக் குழந்தைகளை விட கீழ்கண்டவைகளில் வித்தியாசமாக இருப்பார்கள்;


1. படித்தல், பாடங்களைக் கவனித்தல்

2. வலியறிதல் (வலியே தெரியாது அல்லது சிறு வலிக்கும் பெரிதாக கத்துவார்கள்)

3. பயமின்மை

4. சொல்வதையே திருப்பிச் சொல்லுதல்

5. பார்த்த படங்களையே (அ) விளம்பரங்களை மறுபடி மறுபடி பார்த்தல்

6. அபார ஞாபகசக்தி

7. பிடிவாதம் பிடித்தல்

8. குறிப்பிட்ட சாப்பாடு மட்டும் சாப்பிடுதல் (அ) தவிர்த்தல்

9. தன்னைக் காயப்படுத்திக் கொள்ளுதல்

10. கேள்வி கேட்டால் பதில் கூறாமல் இருத்தல்

பொதுவாக, இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளை 2 வயதிலேயே கண்டுபிடித்து விடலாம். அதீத தெரபி மூலமும் சில மருந்துகள் மூலமும் இந்தக் குறைபாட்டைச் சரி செய்ய வாய்ப்பிருக்கிறது.

சமீபத்திய கணக்கின்படி, அமெரிக்காவில் சராசரியாக 100 ல் ஒரு குழந்தைக்கு இந்தக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4 ஆண்குழந்தைக்கு 1 பெண்குழந்தை என்ற அளவில் இது பாதிக்கிறது. என் நண்பர்களில் 3 பேரின் ஆண் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது. அந்த மூன்று குழந்தைகளும் அமெரிக்காவில் பிறந்தவர்கள். அவர்களின் அன்றாட போராட்டத்தை நான் அறிவேன். ஒரு பையன் ஷாப்பிங் செய்துகொண்டிருக்கும்போது, கடையிலிருந்து வெளியே ஓடிவிட்டான், கண் இமைக்கும் நேரத்தில். நண்பன் சுதாரித்துக்கொண்டு தேடினால் பையனைக் காணவில்லை. போலீசுக்கு போன் செய்து, கடையில் உள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து தேடி கடைசியில் 2.5 மைல் தூரத்தில் ரயில் போகும் தண்டவாளத்தில் நின்றவனைக் கண்டுபிடித்தார்கள். இன்னொரு நண்பனின் பையன், கொதித்துக்கொண்டிருந்த வென்னீரை அப்படியே இழுத்து வயிற்றில் கொட்டிக் கொண்டான்.

பெற்றோர்களின் பொறுமையை இந்தக் குழந்தைகள் ரொம்பவே சோதிப்பார்கள். ஷாப்பிங் சென்றால், கார் பார்க்கை விட்டு நகரமாட்டார்கள். ஒரு இடத்தில் நிற்கமாட்டார்கள், யாராவது சொன்னால் கேட்கமாட்டார்கள், அடித்தால் வலிக்காது, மேலும் ஆக்ரோஷமாக ஆகிவிடுவார்கள். பெருங்குரலெடுத்துக் கத்துவார்கள்.

இது மாதிரி அந்தப் பெற்றோர்களுக்கு கிடைக்கும் தினப்படியான அதிர்ச்சிகள், அனுபவங்கள் வேதனை தரக்கூடியவை. இதன் காரணமாகவே, அவர்கள் பெரும்பாலும் யாரோடும் ஒட்டுவதில்லை. எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. நாங்கள் ஒரு குறிப்பிட்ட சில நண்பர்கள் வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே வீட்டுக்கு வருவார்கள். இந்த மாதிரிக் குழந்தைகளுக்குத் தேவை நமது பரிதாபமோ அல்லது அறிவுரையோ அல்ல. சிறிய புன்னகை மற்றும் நிறைய பொறுமையும் அன்பும்.

இந்தக் குறைபாடு உள்ள பெரும்பாலான குழந்தைகள், ஏதாவது ஒரு தனித்திறமையைக் கொண்டிருப்பார்கள். என் நண்பனின் பையன் அபார ஞாபக சக்தி கொண்டவன். அமெரிக்காவில் உள்ள எல்லா மாநிலங்களையும் அதன் தலைநகரோடு சொல்லுவான். மாநிலத்தின் பேரைச் சொன்னால் அந்த மாநிலத்தின் பேஸ்பால் அணியின் பெயரைச் சொல்லுவான். இன்னொரு நண்பரின் பையன் மிக அருமையாக ஓவியம் வரைவான்.


அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில், இந்தக் குழந்தைகளுக்கென சிறப்பு பள்ளிகள் உள்ளன. அங்கு, இவர்களுக்கு தனித்த கவனம், தனித்தன்மையோடு தயாரிக்கப்பட்ட பாட திட்டங்கள், பெற்றோருக்கென்று கலந்துரையாட குழுமங்கள் இருக்கின்றன. இந்தியாவில், இது பற்றி சரியான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.

இந்தக் குறைபாட்டுக்குக் காரணமாக இதுவரை இரண்டு விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று சிறு வயதில் போடப்படும் நோய்த்தடுப்பூசிகள். மற்றொன்று, ஜீன் குறைபாடு. இதில், நோய்த்தடுப்பூசிகளால்தான் இந்தக் குறைபாடு என்பது சரியாக நிரூபிக்கப்படவில்லை. ஜீன் மாற்றங்கள்தான் என்று பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன.

சமீபத்தில் ஒரு டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நமது குடும்ப சமூக அமைப்புதான் இதற்குக் காரணம் என்று கூறினார். பொதுவாக, குழந்தைகளை மற்றக் குழந்தைகளோடு விளையாட விடுவதில்லை, கற்றுக்கொடுத்தல் குறைவாக இருக்கிறது என்பது போல் சொன்னார். என்னால் முழுமையாக இதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏனென்றால், என் 3 நண்பர்களில், இருவர் நண்பர்கள், உறவினர்களிடம் நன்றாகக் கலப்பவர்கள். இன்னொரு நண்பர் பெரும்பாலான நேரங்களில் எதையாவது குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பார்.

என்னைப் பொறுத்தவரை நான் காரணமாக நினைப்பது, மாறி வரும் நமது உணவுப்பழக்கங்கள்தான். இப்போது நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப்பொருட்கள் பதப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. பெரும்பாலும், மரபணு மாற்றப்பட்டவையாக இருக்கின்றன. இதனால்தான் இந்தக் குறைபாடு என்று நிச்சயமாகக் கூறமுடியாவிட்டாலும், சமீப காலங்களில் அதீத மாற்றம் கண்டது, சுற்றுப்புறமும் உண்ணும் உணவுப்பொருட்களும்தான். 20 வருடங்களுக்கு முன், யாருக்காவது புற்றுநோய் என்றால் அவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும். இப்போதெல்லாம், அது எந்தவகை புற்றுநோய் என்று சர்வ சாதாரணமாகக் கேட்கும் அளவிற்கு போய்விட்டது. உணவு முறைகளும், சுற்றுப்புறச் சூழலும் காப்பாற்றப்படாவிட்டால், இந்த மாதிரி புதுசு புதுசாக நோய்களும் வந்துகொண்டுதான் இருக்கும்.

Autism பற்றிய மேலதிக தகவல்களுக்கு ;

  •     http://www.autism-india.org/index.html
  •     www.autismspeaks.org
  •     www.cdc.gov
  •     http://www.ucdmc.ucdavis.edu/mindinstitute/
  •     http://archpsyc.ama-assn.org/cgi/content/full/archgenpsychiatry.2011.76

***

Tuesday, December 27, 2011

What a rubbish world?

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன். நான் சின்ன வயதில் ஆட்டம் போட்ட ஆறு, பிளாஸ்டிக் கழிவுகளால் பாதி நிரம்பி இருந்தது. ஆற்றில் நீர் வரும் காலத்தில் இப்போதெல்லாம் யாரும் இறங்குவது இல்லையாம். பொங்கலுக்கு பொங்கல், மாடுகளைக் குளிப்பாட்டுவதும், பக்கத்தில் இருக்கும் காட்டாற்றில் வண்டிகளைக் கழுவுவதும் இப்போது மறைந்து விட்டது. தெரிந்தும் தெரியாமலும், பிளாஸ்டிக் அரக்கன் பிடியில் நாமும் விழுந்து விட்டோம்.

பிள்ளைகளோடு ஃப்ளோரிடா டிஸ்னி உலகம் சென்றிருந்தபோது, பார்க்கும் ஒவ்வொருவர் கையிலும், ஒரு பெரிய கடின ப்ளாஸ்டிக் கப், அதற்கு மேல் மூடி, ஒரு ஸ்ட்ரா. இது சும்மா ஒரு பானத்துக்கு மட்டும்தான். சராசரியாக ஒரு 10 வயது பிள்ளை ஒரு நாளைக்கு 4 பானங்கள் குடித்தால், குடித்து விட்டு குப்பைகளை எறிந்தால், எவ்ளோ ப்ளாஸ்டிக் குப்பை? பணியாட்களும் அசராமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்தபடியே இருக்கின்றனர். ஒரு கணக்குப்படி, அந்த பூங்காக்களில் மட்டும் ஒரு நாளைக்கு 1,20,000 பவுண்ட்ஸ் (கிட்டத்தட்ட 56 டன்) குப்பை சேர்கிறதாம். அதில் கண்டிப்பாக ஒரு பெரும்பங்கு ப்ளாஸ்டிக் ஆக இருக்கும். இவ்வளவையும் என்ன செய்கிறார்கள்? Land Fill எனப்படும் குப்பை மேடுகளுக்குத்தான் கொண்டு செல்கிறார்கள். பள்ளமாக இருக்கும் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டி, மேடு படுத்துவதுதான் இது. அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் கண்ணுக்குக் குப்பை தெரியவில்லையென்பதால், அந்த நாடுகள் சுத்தமான நாடுகள் என்று ஒரு பொதுப்பார்வை இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுமே Land Fill செய்து Land Reclaim தான் செய்கிறார்கள். ஆக, குப்பைகள் அழிக்கப்படவில்லை, மறைக்கப்படுகிறது.



சமீபத்தில், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மாலுக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள சாப்பிடும் இடத்தில் (Food Court) இருந்த ஒரு கடையில் பிள்ளைகளுக்கு பழக்கூழ் (Smoothie) வாங்கினோம். அங்கு அமர்ந்து சாப்பிடத்தான் வாங்கினோம். அதற்கு அந்தக் கடையில், ஒரு ப்ளாஸ்டிக் கடின கப், ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன், கடின மூடி, ஒரு ஸ்ட்ரா எனக் கொடுத்தார்கள். நான், கடையில் இருப்பவரிடம், நாங்கள் இங்குதான் சாப்பிடப்போகிறோம், மூடி வேண்டாம் என்று கூறிவிட்டேன். அப்படியே, அவரிடம் ப்ளாஸ்டிக் கப்புகளுக்கும், பவுல்களுக்கும் பதில் பீங்கானில் குடுக்கலாமே. வெளியில் எடுத்துச் செல்வதானால், ப்ளாஸ்டிக்கில் கொடுங்கள் என்று கூறினேன். அவர் என்னை ஒரு விநோத பூச்சியைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, ஒரு சிரிப்போடு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

பிரபல உணவகங்களில், எடுப்புச் சாப்பாடு (Parcel) வாங்கினால் அதற்குக் கொடுக்கபடும் கடின ப்ளாஸ்டிக் கப்புகளைப் பார்த்தால் மனதுக்குச் சங்கடமாக இருக்கிறது. முன்பெல்லாம், ஒரு வாழை இலை, ஒரு செய்தித்தாள், கொஞ்சம் நூலோடு முடித்து விடுவார்கள். அதேபோல் தேநீர்க் கடைகள், மதுக்கடைகள் எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் கப்புகள். ஒரு மணி நேரத்தில் குடித்துத் தீர்க்கக்கூடிய தண்ணீருக்கு ஓராயிரம் ஆண்டுகள் அழிய எடுத்துக்கொள்ளும் ப்ளாஸ்டிக் பாட்டில். வயிற்றைக் கெடுக்கும் பூச்சிமருந்துகளுக்கு, உலகைக் கெடுக்கும் ப்ளாஸ்டிக் பாட்டில்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில், ப்ளாஸ்டிக்கால் ஏற்படும் அழிவுகளைப் பார்த்துவிட்டு, அதன் உபயோகத்தைக் குறைக்க பெரும்பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். நாம், இப்போதுதான் ப்ளாஸ்டிக்கை முழுவீச்சில் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறோம். ஆறுதலாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை நகரங்களில் ப்ளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்து இருக்கிறார்கள். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு, அலுவலகத்துக்கு கீழே இருக்கும் நாயர், காகிதக் கப்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

நாகரீக வளர்ச்சி, ஆரோக்கியம் காரணமாக நம் வாழ்க்கை முறை நிறைய மாறி விட்டது. நிறைய விஷயங்களை நாம் ஒரு சமரசத்தோடு ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். ஆனால், வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்தால், நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து வளர்க்கும் பிள்ளைகளோ அல்லது அவர்களின் பிள்ளைகளோ கொஞ்சம் அதிக நாட்கள் குறைந்த நச்சோடு வாழ்வார்கள்.

1. பார்க்கும், பொருள் வாங்கும் கடைகளில் ப்ளாஸ்டிக் பைகளை மறுப்பது.
2. உணவகங்களில் சென்று சாப்பிடுவது
3. தெரிந்த கடைகளில் சொல்லி ப்ளாஸ்டிக் பைகள் உபயோகத்தைக் குறைக்கச் செய்வது
4. குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் மட்டும் போடுவது என முயற்சி செய்யலாம்.

இன்று காலை என் மகள் ரொட்டி வாங்கிக்கொண்டு வரும்போது சொன்னாள். 'இந்த ஒரு ரொட்டிக்கும் ப்ளாஸ்டிக் பை எடுத்து திணிக்கிறாங்கப்பா, நான் வேணாம்னுட்டேன்' என்று. பெருமையாக இருக்கிறது, என் பேச்சை குறைந்த பட்சம் இரண்டு பேர் (மனைவி உள்பட) கேட்டு, ப்ளாஸ்டிக்கை முடிந்தவரை மறுக்கிறார்கள் என்பதை அறியும்போது!

மாற்றம் என்பது நமது வீடுகளில் இருந்தே ஆரம்பிக்கிறது. மாறுவோம், வருங்கால நமது சந்ததியினருக்குப் பொருள் மட்டுமல்லாது, சுத்தமான காற்று மற்றும் பூமியைச் சேர்த்து வைப்போம். பிளாஸ்டிக்கை முடிந்தவரை மறுப்போம்!

***

தண்ணியடிச்சுட்டு கார் ஓட்டுறது தப்பா?

எச்சரிக்கை - நான் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு தாறுமாறாக வண்டி ஓட்டுபவர்களுக்கு ஆதரவானவன் இல்லை.

ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு நாள் சாயந்தரம் வழக்கம்போல, செந்தில் மாப்ள ஆஃபிசில் சந்திப்பு. லைட்டா கொஞ்சம் டைட்டாவலாம்னு
ஆளுக்கு ஒன்னரை பியர் சாப்பிட்டோம். நான் பொதுவாக பியர் சாப்பிடுவதில்லை. 8 மணிக்கு சாப்பிட்டு விட்டு, 12:30 மணி வாக்கில் பெருங்குடியில் நான் தங்கியிருந்த வீட்டுக்குச் செல்ல காரில் கிளம்பினேன். கொஞ்சமாக மழை. மத்திய கைலாசத்திலிருந்து வலது பக்கம் திரும்புவதற்காக பச்சை விளக்குக்குக் காத்திருந்தேன். எனக்கு முன் ஒரு மினி லாரி, பக்கத்தில் ஒரு பைக். அவர்கள் முன் சில வண்டிகள். வலது பக்க சிக்னல் கிடைத்ததும் நகர ஆரம்பித்தோம். திரும்பும் வேளையில், பச்சை பார்த்துதான் திரும்பினேன். ஒரு நொடி நேரத்தில், பச்சை அம்பைக் காணோம்! திரும்பியவுடன் அங்கிருந்த இரு காவலர்கள் எங்கள் மூவரையும் நிறுத்தச் சொன்னார்கள்.

நான் காரை ஓரம் கட்டிவிட்டு காத்திருக்க, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பெயர்கொண்ட காவலர் என்னிடம் வந்தார். லைசன்ஸ், ரெஜிஸ்ட்ரேஷன்
கேட்டார், கொடுத்தேன். சிவப்பு சிக்னல்ல திரும்புனது தப்புன்னு சொன்னார். நான், திரும்பும்போது பச்சைதான் இருந்தது, கண்ணிமைக்கும் நேரத்தில்,
எந்த அறிகுறியும் (ப்ளிங்க்) இல்லாம சிவப்பு மாறுனா நான் என்ன சார் செய்யட்டும்னு கேட்டேன். அவர் அதெல்லாம் முடியாது, நாளைக்கு கோர்ட்டில் வந்து ஃபைன் கட்டுங்கன்னு சொன்னவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, 'நீங்க குடிச்சுருக்கீங்களா சார்'ன்னு கேட்டார். நானும், திடீர்
அரிச்சந்திரன் அவதாரம் எடுத்து, ஆமா, எட்டு மணிக்கு பியர் சாப்பிட்டேன்ன்னு சொன்னேன். அவர், சரி இன்னிக்கு வசமா சிக்கிட்டான் ஒருத்தன்னு நெனச்சுகிட்டு, சார் கொஞ்சம் இறங்கி வாங்க, இன்ஸ்பெக்டர்கிட்ட பேசணும்னு சொன்னார். நானும் இறங்கி இன்ஸ்பெக்டரிடம் போனேன்.

புகழ்பெற்ற குதிரையின் ஓனரான மாவீரன் பெயர் கொண்ட அவர், சார் குடிச்சுட்டு கார் ஓட்டக்கூடாது. நீங்க ஓட்டிகிட்டு வந்துருக்கீங்க. என்ன
செய்யலாம்னு கேட்டார். நான், அய்யா நான் எட்டு மணிக்குதான் பியர் சாப்பிட்டேன், அது அப்போவே பாத்ரூமுக்குப் போயிடுச்சு. காவலர் கேட்டாரு, நான் ஆமான்னு சொன்னேன்னு அவர்கிட்டே சொன்னேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன்னு சொன்னேன். அவர் விடுவதாயில்லை. பைக் தம்பியையும், மினி லாரி தம்பியையும், சரிப்பா இப்ப என்ன சொல்றீங்க, 2000 ரூப தண்டம் கட்டவேண்டி வரும் பரவாயில்லையான்னு கேட்டார்.
அவங்க ரெண்டு பேரும் கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க.

என்னை தனியே கூப்பிட்ட பாகிஸ்தான் அதிபர், சார் பாத்தா(?) படிச்சவர் மாதிரி இருக்கீங்க. எதுனா பாத்து செய்ங்க. நீங்க பிரச்சினை இல்லாம
போயிடலாம்னு பேரத்தை ஆரம்பிச்சார். நான் அப்போதான் அமெரிக்க ரிட்டர்ன்ங்குறதால, லஞ்சம் குடுக்கக்கூடாது எனும் என் கொள்கையை உடும்பா புடிச்சுகிட்டு, சார் நான் லஞ்சமெல்லாம் குடுக்கமாட்டேன்னு சொன்னேன். உடனே அவர் மாவீரன்கிட்டே போய் ஏதோ சொன்னார். அவர், மத்த ரெண்டு பேரையும் பாத்து, சரி நீங்க சரிவர மாட்டீங்கன்னு சொல்லிட்டு, கேஸ் குறிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு, என்ன கோபம்ன்னா, நான் திரும்பும்போது பச்சை இருந்தது. ஒரு செகண்ட்குள்ளே, அது காணாமப் போச்சு. ரெண்டு செகண்ட்குள்ளே எப்படி அந்த சந்திப்பில் வண்டியத் திருப்புறது. அதனாலே, நான் திரும்பும்போது பச்சைதான் இருந்தது, சிக்னலில் கோளாறுன்னு வாதம் பண்ண ஆரம்பிச்சேன். அவங்க அதெல்லாம் காதுலயே போட்டுக்கல.

நானும், சரி இவங்ககிட்டே பேசி பிரயோசனம் இல்லன்னுட்டு, மாவீரன் கிட்டே, சட்டப்படி என்ன பண்ணனுமோ அதப் பண்ணிடுங்க, லஞ்சம்
குடுக்கமாட்டேன்னு சொன்னேன். அவரும் (கிண்டலா) சரி அப்படியே பண்ணிடுவோம்னு சொல்லி அதிபரையும் எங்க மூனு பேரையும் ராயப்பேட்டை அரசாங்க மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். நானும், சரி என்னதான் ப்ரோசிஜர்ன்னு பாத்துடலாம்னு ஆர்வத்தில் கெளம்பிட்டேன். இவ்வளவுக்கும், ஒரு 500 ரூபாய் (அதான் அவங்க கேட்டது) இல்லேன்னா, அப்போ இருந்த ஒரு சக்தி வாய்ந்த அமைச்சர், அல்லது முதலமைச்சர் செல்லில் இருந்த ஒரு காவல் அதிகாரி இவங்க யாராவது ஒருத்தர் பேரச் சொல்லிட்டு போயிருக்க முடியும். ஆனால், எனக்கு அப்படிச் செய்ய மனமில்லை. தவிரவும், நம்மூர் சட்டங்கள் எப்படி இருக்கின்றனன்னு நேரடியா பார்க்க ஒரு வாய்ப்பை விட மனசில்லை. குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை, அதனால் இன்னும் தைரியம்!!

ஒரு ஷேர் ஆட்டோவில் எங்களை ஏத்திகிட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போனார் அதிபர். வரும் வழியெங்கும், மத்த ரெடு பேரும் கெஞ்சி கெஞ்சி அலுத்துப்போயிட்டாங்க. அங்கு போனதும், பணியில் இருந்த சின்னக்குயில் பேர் கொண்ட (பயிற்சி) டாக்டரிடம் அழைத்துப்போனார். அந்தம்மாவுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:

சின்னக்குயில் - உங்க பேரு
நான் - ராஜா
சி.கு - அப்பா பேரு
நான் - சொன்னேன்
சி.கு - அட்ரஸ்
நான் - சொன்னேன்
சி.கு - குடிச்சிருக்கீங்களா
நான் - எட்டு மணிக்கு பியர் சாப்பிட்டேன் (அப்போ மணி 1:30am)

அதுக்கு அப்புறம் ஒரு சீட்டில் ஏதோ எழுதியது சி.கு. சரி நீங்க போகலாம்னு சொன்னிச்சு. எனக்கு ஒன்னும் புரியல. அந்த சீட்டுல என்ன எழுதியிருக்கீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவங்க, நீங்க driving under the influence of alcohol க்கு மருத்துவர் சான்று குடுத்திருக்கேன்னாங்க. எனக்கு கோபம் தலைக்கேறிடுச்சு. எத வச்சு கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டேன். நீங்கதான் சொன்னீங்க குடிச்சுருக்கேன்ன்னு அத வச்சுதான்ன்னு சொன்னாங்க. 8 மணிக்கு ஒன்னரை பியர் சாப்பிட்டுட்டு 12:30 மணிக்கு காரை மறைக்கும்போது என் ரத்தத்துல எவ்வளவு பர்சென்ட் ஆல்கஹால்
இருக்கும்னு கேட்டேன். எனக்கு என்ன டெஸ்ட் எடுத்து கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டா, சி.கு நாங்க டெஸ்டெல்லாம் எடுக்குறது இல்ல, உங்க கண்ணு
சிவப்பா இருக்கு, தவிர நீங்கதான் சொன்னீங்க குடிச்சுருக்கேன்ன்னு அத வச்சுதான்னு சொன்னுச்சு. நான் சரி, இப்போ நான் குடிக்கலன்னு சொல்றேன், அதையும் நம்புவீங்களான்னு கேட்டேன். அதுக்கு சி.கு சார் அதெல்லாம் எனக்குத் தெரியாது, போலிஸ்காரங்க கூட்டிட்டு வருவாங்க, நாங்க டாக்டர் செர்டிஃபிகேட் குடுப்போம், அவ்வளவுதான் எனக்குத் தெரியும்னு சொல்லிச்சு. எனக்கு அழுகுறதா சிரிக்கிறதான்னு தெரியல. சரி தொலைங்கன்னுட்டு வெளில வந்துட்டேன். மறுபடியும் மாவீரன்கிட்டே அழைத்து வரப்பட்டோம். சார், சட்டப்படி நான் என்ன செய்யனுமோ செஞ்சுட்டேன். படிச்சவரா இருக்கீங்க, சட்டப்படி நான் கார் குடுக்கக்கூடாது, நீங்க எடுத்துகிட்டுப் போங்க 2200 ரூபாய் தண்டம் கட்ட வேண்டி வரும்.குடுத்துட்டுப் போங்க, உங்க லைசென்சையும் குடுத்துட்டு நாளைக்கு மயிலாப்பூர் ஸ்டேஷன்ல வந்து லைசன்ஸ வாங்கிகோங்கன்னு சொன்னார்.

இதுக்கு இடையில், அங்கு வந்த என் மச்சான் (அவன் தாய்மாமன்தான் போலிஸ் அதிகாரி), அங்கிள், ஒரு போன் மாமாவுக்கு போட்டிருக்கலாம்ல,
இல்லன்னா 500 ரூபா வீசி எறிஞ்சு இருக்கலாமே, ஏன் இப்படி இந்த மழையில அலையிறீங்கன்னு கேட்டான். நான் சும்மாதான், நம்ம சிஸ்டமும்
சட்டமும் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கதான்னு சொல்லிட்டு காரை எடுத்துகிட்டு வீடு போய் சேர்ந்தேன்.

அடுத்த நாள், செந்தில் மாப்ளைய கூட்டிகிட்டு ஸ்டேஷன் போனேன். அவன் போகும் வரை ஒரே திட்டு. எனக்கு போன் பண்ணியிருக்கலாம்ல.
இந்தியாவுக்கு வந்துட்டா இந்தியன் மாதிரி இருக்கக் கத்துக்கோடான்னு ஒரே அட்வைஸ்! மாவீரன், எங்களுக்கு முதுகைக் காட்டிகிட்டு நின்னுகிட்டு இருந்தார். திரும்பி என்னைப் பார்த்து டக்குன்னு என்ன நெனைச்சாரோ ஒரு சல்யூட் வச்சார், எனக்கு ஒரே சிரிப்பு. சரி வாங்க சார்ன்னு மேலே ரூமுக்கு கூட்டிகிட்டுப் போனார். உக்காரச் சொல்லிவிட்டு, செந்திலிடம் பேச ஆரம்பித்தார். செந்தில், சார் இவன் நெனச்சுருந்தா, நேத்தே ஒன்னும் பிரச்சினை இல்லாம வீடு போயிருக்க முடியும். கொஞ்சம் நேர்மையான ஆளுன்னு என்னைப் பத்தி சொல்ல ஆரம்பித்தான். உடனே அவர், அடடா சார் நேத்தே என்கிட்ட சொல்லியிருக்கலாமே, ஏன் சார் இப்படிப் பன்னிட்டீங்க, சாரி சார்ன்னு ஆரம்பிச்சுட்டார். நான் பரவாயில்ல, சும்மா சட்டம் தெரிஞ்சுக்கதான் அப்படிப் பண்ணேன்னு சொன்னேன். அவருக்கு அப்ப ஒரு போன் வந்தது.

கொஞ்சம் நேரம் பேசிட்டு, ஸ்பீக்கரில் போட்டுவிட்டார். மறுமுனையில் பேசியது அவருக்கு மூத்த அதிகாரி, என்னய்யா எத்தன Drunken Driving கேசு
புடிச்சீங்க, 30 டார்கெட் வச்சுருக்கானுங்க. முடியுமில்லன்னு கேட்டார்.
பேசி முடிச்சதும் மாவீரன், பாருங்க சார் மேலேயிருந்து எங்க உயிர எடுக்குறாங்க. நாங்க யாரையும் புடிக்கிறது இல்ல. கணக்கு காட்ட சில சமயம்
கடுமையா நடந்துக்கவேண்டியிருக்கு. ஒரு ரகசியம் சொல்லவா, நாங்க பெரும்பாலும் புடிக்கிறது சென்னை பதிவு எண் கொண்ட வண்டிகளை
அல்லன்னு சொன்னார்!! (என்னோட கார் நம்பர் TN 48). சார் தப்பா நெனச்சுக்கதீங்க, கேஸ் ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். அதனாலே கேன்சல்
பண்ணமுடியாது. ஃபைனை நானே கட்டிட்டு உங்களுக்குத் தகவல் சொல்றேன்னு சொன்னார். அடக்கொடுமையேன்னுட்டு, நாங்களும் கெளம்பி
வந்துட்டோம்!

அமெரிக்காவில் குடித்து விட்டு வண்டி ஓட்டினால் தண்டனை கடுமையாக இருக்கும். ஆனால், ஒரு ட்ரைவரை அந்தக் கேசுக்காக பிடிக்கும் முன்
ஏகப்பட்ட நடைமுறைகள். முதலில், வேறு ஏதாவது காரணுத்துக்காக வண்டி மறிக்கப்பட்டிருக்கவேண்டும். உதாரணத்துக்கு, காரை தாறுமாறாக
ஓட்டுதல், அதிக வேகத்தில் போதல், இந்த மாதிரி. காரை விட்டு கீழிறக்கி (இதுக்கு மட்டும்தான் கீழே இறங்கவேண்டும், மத்த சமயங்களில் ட்ரைவர்
சீட்டிலேயே இருக்கவேண்டும், கீழே இறங்கினால், அதிகாரியைத் தாக்கத்தான் வருகிறோம்ன்னு ஒரு தவறான புரிதல் அதிகாரிக்கு வந்திடும்)
ட்ரைவரிடம் Breathalyzer சோதனை செய்யப்பட்டு, அவர் ரத்தத்தில் 0.8% க்கு அதிகமாக ஆல்கஹால் இருந்தால் மட்டுமே (இது மாநிலத்துக்கு
மாநிலம் மாறும்) அவரை புக் செய்யவேண்டும். அதுக்கு அப்புறம் அவரை வண்டியோட்ட அனுமதிக்கக்கூடாது. உடனே அருகில் இருக்கும்
மருத்துவமனையில் ஆல்கஹால் அளவு ரத்த சோதனை செய்து உறுதி செய்யப்படவேண்டும். இவை எல்லாம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டால்தான் தண்டனை கிடைக்கும். அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடிப்பவர்கள். வேலை முடிந்தவுடன் நிறைய தடவைகள் நேரே பார் போயிருக்கிறோம். பெரும்பாலும் பியர் அல்லது ரெட் வைன் சாப்பிட்டுவிட்டு நன்றாக சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, நிறைய பேசிவிட்டு நிதானமாகத்தான் வீடு திரும்புவோம். இது வரை நான் ஸ்பீடிங் தவிர வேறு எதற்காகவும் தண்டிக்கப்பட்டதில்லை!

நம்மூரில், முதலில் சிக்னல்கள் ஒரு ஒழுங்கில் அமைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு சந்திப்புக்கும் ஒரு மாதிரி சிக்னல்கள். அதுவும் இடது, வலது
புறம் திரும்புவதற்கு சில ப்ளிங்க் ஆகி நிற்கும், சில இடங்களில் எப்போது போகும் என்பது தெரியாது. அதே மாதிரி, ரத்தத்தில் ஆல்கஹால் அளவு
என்பது கட்டாயமாக பரிசோதிக்கப்படவேண்டும். சும்மா, சென்னை தவிர்த்த ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்களைப் பிடித்தோ, சிபாரிசுக்கு ஆளில்லாதவர்களைப் பிடித்தோ வெறும் கணக்கு காட்டக் கூடாது. சிக்னலை மீறுபவர்கள், (இரவில்) தாறுமாறாக வண்டி ஓட்டுவோர் மட்டும் பிடிக்கப்பட்டு ரத்தசோதனையோ அல்லது மூச்சு சோதனையோ செய்யவேண்டும். இதெல்லாம் இல்லாமல், இருக்கும் சிஸ்டத்தை தொடர்ந்து ஃபாலோ செய்தால், சட்டத்தை மதித்து நடக்க விரும்பும் என்னைப் போல் பலரும், 500 ரூபாயையோ அல்லது சிபாரிசுக்கு நம்பரையோ தயாராக வைத்துக்கொண்டுதான் இனி ரோட்டில் செல்லவேண்டும்!

***

Thursday, December 22, 2011

தூசி தட்டியாச்சு!

கடந்த ஒரு வருஷமா ஒன்னும் எழுதல (ம்க்கும்...அதுக்கு முன்னே, எழுதி கிழிச்ச மாதிரி). கடுமையான வேலை பளு, உக்காந்து எழுத நேரமில்லாதது (இப்படித்தான் சொல்லணுமாம்!), கிடைத்த நேரத்தில் சோம்பல், அதீத வெளியூர் பயணங்கள்னு ஒரு வருசம் ஓடிப்போச்சு!

நிறைய நண்பர்கள், 'நீ என்னதான் செய்றேப்பான்னு' கேக்குறாங்க. IT ல உள்ள சில நண்பர்களுக்கும் நான் இருக்குற Data Warehouse & Business Intelligence துறை கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு. இது ஒரு புக முடியாத துறைன்னு சில பேர் நினைக்கிறாங்க. அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமா, துறை சார்ந்த வலைப்பூ ஒன்னு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதில், Data Warehouse & Business Intelligence பத்தின உபயோகமுள்ள (அத நீங்கதான் சொல்லணும்!!) பதிவுகள் எனக்குத் தெரிந்த எளிய ஆங்கிலத்தில் வரும்.

இந்தத் துறையில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், வேலை வாய்ப்புகளை தெரிவிக்கவும் இந்த வலைப்பூ பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.

நண்பர்கள் இதைப்பற்றி ஆலோசனை எதுவும் இருந்தால் தயவு செய்து எனக்குத் தெரிவியுங்கள், நன்றி!

எனது துறை சார்ந்த வலைப்பூ ...... விரைவில்......!