Thursday, February 14, 2008

பரவாக்கோட்டையில் வாலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள்!

என்னங்க, ஆச்சரியமா இருக்கா? இப்ப இருக்குற அமெரிக்க நுகர்வுக் கலாச்சார வாலன்டைன்ஸ் டே இல்ல அது. ஒரு ஜாலியான (அர்த்தமே புரியலேன்னாலும்!) கொண்டாட்டம்.
எனக்கு 7-8 வயது இருக்கும்போதே அந்த விழா அழிந்து விட்டது. நினைவில் இருப்பவை மட்டும் இங்கே..


அந்த விழாவுக்கு பேரு, காமன் பண்டிகை (காமாண்டி - எங்க ஊரு மொழியில!). ஒவ்வொரு தெரு முனையிலேயும் அல்லது நால்ரோடு கூடும் இடங்களிலேயும் சின்னதா ஒரு இடத்தைத் தேர்வு பண்ணி கீழே சாணம் போட்டு மொழுகி விட்ருவாங்க. நாலு மூலையிலேயும் சின்ன சின்னக் கம்பு நட்டு, சின்ன பந்தல் மாதிரி போட்டுடுவாங்க. நடுநாயகமா, ஒரு கம்பு நட்டு அதுமேலே வக்க பிரிய (வைக்கோல் கயிறு) சுத்தி உச்சியில ஒரு வரட்டிய வச்சு கட்டிவிட்ருவாங்க. அந்தக் கம்பு ஒரு கரண்டிய நட்டு வச்ச மாதிரி இருக்கும் (உத்தேசமா!). அதுக்கு, மாவிலை, வேப்பிலை, குங்குமம், திருநீறு எல்லாம் வச்சு அலங்காரம் பண்ணியிருக்கும். 'வசதியான' தெருவா இருந்தா அதுக்குள்ள ஒரு விளக்கு ஒன்னு வச்சு சாயந்திரம் ஆனா எரியவிடுவாங்க. இதுல பாருங்க, பொம்பளைக யாரும் இந்த 'விசேசத்துல' கலந்துக்க மாட்டாங்க. ஏன்னு எனக்குத் தெரியல!

இது ஒரு 15 நாளைக்கு அப்படியே இருக்கும். யாரும் கண்டுக்க மாட்டாங்க!! தெருப் பெருசுங்க 15ஆம் நாள் முடிவுல ஒன்னு கூடி, இன்னிக்கு ராத்திரிக்கு 'காமாண்டி கொளுத்துறது' அப்பிடின்னு 'அதிகாரப்பூர்வமா' அறிவிப்பாங்க! அன்னிக்கு ராத்திரிதான் விசேசம். சாயந்திரம் ஆனா, வீட்டுல வெளையாடப் போறதா பொய் சொல்லிட்டு, தெருமொனைக்கு ஜூட் விடுவோம். வீட்டுப் பெருசுங்களுக்குத் தெரியும், காமாண்டி கொளுத்துறதப் பாக்க போறான்னு!

சாயந்திரமே, தெருவுல இருக்குற 'தொழிலதிபர்கள்' (பெட்டிக் கடைக்காரர்கள் என்று பொருள் கொள்க!) மற்றும், 'பெருந்தனக்காரர்கள்' அளிக்கும் அஞ்சு பத்த வச்சுகிட்டு, பொட்டுக்கடலையும், நாட்டுச் சக்கரையும் வாங்கி வச்சுருப்பாங்க. ஒரு ஏழு எட்டு மணி ஆனவுடனேதான்யா, மெயின் கூத்து ஆரம்பிக்கும். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு 'பாட்டுக்காரர்' இருப்பார். அவருக்கு 'ஆனத' பாத்துகிட்டா (செல பேரு வெத்தலை பாக்கு - low maintenance, செல பேரு 'தண்ணி மிண்ணி' கேப்பாங்க!), அவரு ஸ்பாட்டுக்கு வந்துடுவாரு கொரல தட்டி சட்டி சரி பண்ணிகிட்டு!

பாட்டுக்காரர் சிக்னல் குடுத்தவுடனே, ஒரு ரெண்டு விடலப் பசங்கள செலெக்ட் பண்ணி, திருநீறு பூசி சாமி கும்பிடச் சொல்லுவாங்க. ஒருத்தன் ரதி, இன்னொருத்தன் 'மம்முதன்' (மன்மதன்). ரெண்டு பேரும் ரெண்டு குழுவுக்குப் பிரதிநிதி! ரெண்டு குழுவும் எதிரும் புதிருமா நிக்கும். பாட்டுக்காரர் நடுவாந்திரமா நிப்பார் (செல தெருவுல குழுவுக்கு ஒரு பாட்டுக்காரர் இருப்பார்). ரெண்டு குழுவுலேயிருந்தும் ஒரு 'பலசாலி' கையில் நீள துண்டோட இருப்பாரு. துண்ட அந்தந்த எளவட்டத்தோட இடுப்புல சுத்தி ரெண்டு மொனையையும் பலசாலி கையில வச்சுருப்பாரு. ரதி, மம்முதன் ரெடி. பாட்டுக்காரரு நல்லா கொரலெடுத்துப் பாடுவாரய்யா... அப்பிடி பாடுவாரு. நமக்கு இப்போ ஒண்ணும் ஞாபகம் இல்ல! அப்பிடி, பாடும் போது, ரதி பக்கம் பாடும்போது, மம்முதன் அப்பிடியே ரதி பக்கம் வருவாரு. ஒடனே பலசாலி, துண்ட ஒரு இழு இழுத்து மம்முதனக் 'கட்டுப் படுத்துவாரு'!! அதே மாதிரி, ரதி் பக்கமும் நடக்கும்.

பாட்டெல்லாம் முடிஞ்ச பெறகு (இல்ல, பாட்டுக்காரருக்கு 'சரக்கு' தீந்தபெறகு!), போட்டு வச்ச பந்தலப் பிரிச்சுப் போடுவாங்க. எல்லாத்தையும் கூட்டிக் குமிச்சுத் தீ வச்சுருவாங்க!!!! அப்படியே சைடுல, பொட்டுக்கடல வினியோகம் நடக்கும். தீ அணைஞ்சவுடனே எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போய்டுவாங்க.

அடுத்த நாள், இன்னும் சரி கூத்து நடக்கும். அன்னிக்குத்தான் 'புலிவேடம்'!! வேடம் போடுறதுக்கு ஒருத்தர் ரெடியா இருப்பாரு. இத யாருக்கும் சொல்லமாட்டாங்க. ஒரு வீட்டில் ரகசியமா 'பெயிண்டிங்' நடக்கும். உடம்பு முழுதும் - ஆமா, உடம்பு முழுதும் (லங்கோடு ஏரியா தவுத்து!) பெயிண்ட பூசிகிட்டு, 'புலி' ரெடியாய்டும். செல படங்கள்ல காட்டுற மாதிரி துணிப்புலி இல்ல. வெளியூர்லருந்து 'டமுர்செட்டு' (drums set with clarinet) வந்து எறங்கி (அவங்களுக்கும் 'எறங்கி' இருக்கும்!) கூட்டம் கள கட்ட ஆரம்பிக்கும்! நாங்க வீட்டுல அதே பொய்ய சொல்லிட்டு 'புலி' ஆட்டம் பாக்க கெளம்பிடுவோம்.

எல்லாரும் ரெடியானவுடனே, டமுரு செட்டு அடி தூள் கெளப்பும். புலி ஆட ஆரம்பிக்க, வசூல் ராஜா மஞ்சள் பையோட பின்வர, ஊர்வலம் ஆரம்பிக்கும். ஒவ்வொரு வீடா போயி, ஒரு ஆட்டத்த போட்டுட்டு வசூல பண்ணிட்டு தொடருவாங்க. செல பேரு நெல்லு குடுப்பாங்க. செல பேரு வீட்டுகுள்ள போய் ஒளிஞ்சுகிட்டு, இல்லேன்னு பொய் சொல்ல சொல்லுவாங்க. இதுல, மாமன் மச்சான் புலி வேஷம் போட்டுகிட்டு வந்துட்டான்னா போச்சு. கணிசமா ஒரு 'துகை' (தொகை) போய்டும். அங்கங்கே புலிக்கு வாய் புளிக்க எலுமிச்சம்பழம் குடுப்பாங்க. அத வாயில கடிச்சுகிட்டு புலி வேக வேகமா போக ஆரம்பிக்கும். ஒரு ரெண்டு மூனு தெரு போனதுக்கு அப்புறம், புலிக்கு கொஞ்சம் கொஞ்சமா 'கிலி' புடிக்க ஆரம்பிக்கும். ஏன்னா, பெயிண்டெல்லாம் நல்லா காஞ்சு ஒடம்பு வறவறன்னு ஆக ஆரம்பிக்கும். வேர்வை சொரக்கும் ஆனா, வெளியில போக வழியில்லாமே 'புலி' படற அவஸ்தை பாவமா இருக்கும்!

ஒரு கட்டத்துல புலி வேற வழியில்லாம, போதுண்டா சாமின்னு ஊர்க்கொளம் பாத்து வேக வேகமா 'ஓட' ஆரம்பிச்சுறும். 'புலிப்படை' பின்னாலேயே மண்ணெண்ணை, சோப்பு சகிதம் ஓடும். ஒரு வழியா கொளத்தடியில போயி ஒக்காந்து, நண்டு சுண்டெல்லாம் பெயிண்ட சொரண்டி எடுக்கும். அப்ப 'புலி' படுற வேதன நமக்கெல்லாம் சிரிப்பா இருக்கும். ஒரு வழியா சொரண்டல் முடிஞ்சு ஒரு குளியலப் போட்டுட்டு, அப்பிடியே மத்ததயும் உள்ளே போட்டுட்டு புலி ரெஸ்ட் எடுக்க குகைக்குள்ள (வீடுதாங்க!) போயிடும். புலிப்படை, டமுரு செட்டுக்கு செட்டில் பண்ணி அனுப்பிட்டு, வசூல எடுத்துகிட்டு 'வேட்டை' தேடி கடைக்குப் போயிடுவாங்க!! நாங்களும் திட்டு வாங்க காதுகள ரெடி பண்ணிகிட்டு மெதுவா வீட்டுப் பக்கம் ஒதுங்குவோம்.

இந்த நிகழ்ச்சியெல்லாம் ஏதாவது புராண கதைய ஒட்டி நடந்ததா, அந்தப் பாட்டுகளுக்கு என்ன பொருள், ரதி, மன்மதன் உண்மை மனிதர்களா, ஏன் 'காமாண்டியை' எரிக்கிறாங்க - இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சா இங்கே சொல்லுங்களேன்! இப்போ எங்க ஊர்ல இதெல்லாம் நடக்குறது இல்ல. எல்லாரும், 'நாகரீகமாயிட்டதாலே' இனிமே வாலன்டைன்ஸ் டே கொண்டாடுவங்கன்னு நெனைக்கிறேன். ஆனா, நான் பாத்தது கிட்டதட்ட வாலன்டைன்ஸ் தின கொண்ட்டட்டம்னுதான் சொல்லனும்.

கொசுறு: சிங்கப்பூரில் மட்டும்தான் இந்த நாளுக்கு ஒழுங்கான தமிழ்ப்படுத்தல் இருக்குன்னு நெனைக்கிறேன். அங்கே 'அன்பர்கள் தினம்' அப்பிடின்னுதான் சொல்றாங்க. அன்பு வைத்திருக்கும் யாருக்கும் வாழ்த்துக்கள், பரிசுகள் பரிமாறிக்கொள்ளலாம். ஆனா, எதையுமே அறைகுறையாகப் புரிந்துகொண்டு பந்தா காட்டும் நமது நாட்டில்.....???

40 comments:

கானா பிரபா said...

//ஒரு கட்டத்துல புலி வேற வழியில்லாம, போதுண்டா சாமின்னு ஊர்க்கொளம் பாத்து வேக வேகமா 'ஓட' ஆரம்பிச்சுறும். 'புலிப்படை' பின்னாலேயே மண்ணெண்ணை, சோப்பு சகிதம் ஓடும். ஒரு வழியா கொளத்தடியில போயி ஒக்காந்து, நண்டு சுண்டெல்லாம் பெயிண்ட சொரண்டி எடுக்கும். //


;-)))

rasiththen

துளசி கோபால் said...

காமனை எரிச்சாரே சிவ பெருமான். அதுதான் இந்த காமாண்டி போல இருக்கு.

வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகையும் இதையொட்டித்தான்.

அதான் காமனே வேணாமுன்னு எரிச்சாச்சே....அப்படியும் நம்ம நாட்டில் மக்கள் பெருக்கத்தைப் பாருங்க. இன்னும் காமனை எரிக்காம விட்டிருந்தா?

ஒரு 100 பில்லியனைத் தாண்டி இருப்போமுல்லே?

வடுவூர் குமார் said...

இங்கு காலையில் இருந்து வானொலியில் “அன்பர் தின வாழ்த்துக்கள்” என்று ஒரே ஹலோ ஹலோ என்று தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
காலையில் இரு வரி கவிதை சொல்லுங்க என்று சொல்லி சிலர் நம்மை பாடாய் படுத்தினார்கள்.கல்யாணம் ஆகி 20 ஆண்டு ஆனவர் சினிமா பாட்டு பாடினார்.இப்பொதும் ஒவ்வொருவரும் கூப்பிட்டு வாழ்த்துக்கள் சொல்லி சொல்லி... வொனொலியை அடைத்துவிட்டேன்,தாங்க முடியவில்லை. :-)
ஊரில் இந்த மாதிரி ஒரு விழாவா? நான் கேள்விப்பட்டதே இல்லை.
ஊர் மணம் கமழ சொல்லியிருக்கீங்க.

குசும்பன் said...

///இப்போ எங்க ஊர்ல இதெல்லாம் நடக்குறது இல்ல. எல்லாரும், 'நாகரீகமாயிட்டதாலே'//

இப்படி பல விசயங்கள் அழிஞ்சுக்கிட்டு வருது முன்பு எல்லாம் தேர் இழுக்க ஆளுங்க போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க இப்ப எல்லாம் டிராக்ட்டர் இழுக்குது இன்னும் கொஞ்ச நாள்ள ரிமோட் & ஆட்டோமேட்டிக் தேர் வந்துடும் போல தானா ஊரை ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு திரும்ப ஷெட்டுக்கு போய்விடும் போல!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வணக்கம் தஞ்சாவூரான்,

எங்கள் ஊரிலும் காமன் பண்டிகைகள் இன்றளவும் நடந்து வருகிறது. தெரு முக்கத்தில் நடக்கும். (4 அல்லது 5 இடங்களில்). உங்கள் பதிவு, எனது பழைய நினைவுகளில் பசுமையைக் கூட்டிவிட்டது. சின்ன வயதில் காமண்டி(மருவல் அல்லது சுருக்கம்) என்று சொல்லிக்கொள்வது வழக்கம். நீங்கள் சொல்வது போல் நிறைய sponsors உண்டு.

அன்புடன்,
ஜோதிபாரதி.

Unknown said...

வாங்க, கானா.
ரசித்தமைக்கு நன்றி!

Unknown said...

//காமனை எரிச்சாரே சிவ பெருமான். அதுதான் இந்த காமாண்டி போல இருக்கு.//

வாங்க அக்கா... நானும் அப்படித்தான் நினைக்கிறேன்!

//அதான் காமனே வேணாமுன்னு எரிச்சாச்சே....அப்படியும் நம்ம நாட்டில் மக்கள் பெருக்கத்தைப் பாருங்க. இன்னும் காமனை எரிக்காம விட்டிருந்தா?//

காமனைத்தானே எரிச்சோம்...காமத்தை எரிக்கலயே :)

ILA (a) இளா said...

எலேய் மக்கா, என்னவெ இது,. இப்படியெல்லாம் கேள்விபட்டதேயில்லேல்ல. நல்லா இருக்கே இந்த விளையாட்டு,,,

Thekkikattan|தெகா said...

தஞ்சாவூரான்,

அழகாக சொல்லியிருக்கீங்க
படிக்கும் பொழுது எல்லாம் சூடும் இறங்கிடுச்சு'(அன்பர்கள் தினத்தைப் நல்லா சூடு சொரனை வார மாதிரி எழுதணுமின்னு இருந்தேன்...).

உண்மையாகவே அப்படியே ஊர்க் காட்டுப் பக்கமிருந்த மாதிரி இருந்துச்சு.
நம்மா ஊராண்டையும் இருக்கும் ஆனா, மழை போயிருத்திற்காக மணலில் காமன் கட்டுவாங்க, ஒரு முச்சந்தியில. பிறகு பெண்கள் சுத்தி உக்கார்ந்து கடைசி நாள் அழுகுங்க, அதே போல பொரி, பொட்டுக் கடலை வினியோகமும் உண்டு...

ஆனா, இப்பல்லாம் அது கிடையாது. ஏன்னா திடீரென்று பரவாக்கோட்டை, கரம்பக்குடி போன்ற ஏரியாக்களில் எல்லாம் மின்யாபாலிஸில் பொழிகிற மாதிரியே பனிப் பொழிவாம் யாருமே வெளியில் எல்லாம் வருவது கிடையாது... எல்லாம் வெள்ளைக்காரய்ங்க ஆகிட்டாங்க :))

//ஆனா, எதையுமே அறைகுறையாகப் புரிந்துகொண்டு பந்தா காட்டும் நமது நாட்டில்.....???//

இன்னமும் இந்தியாவில் இந்த காதல் திருமணங்கள் என்பது ஃபாண்டஸி நிலையிலயே தேக்கமுற்றுப் போனதால்தான் அதன் பொருட்டே கச்சடா திரைகதைகளைக் கொண்டு கதைச் சொல்லி சினிமா உலகம் காசு பார்த்துக் கொண்டுள்ளது. இந் நிலையில் இந்த மேற்கத்திய "வாலண்டைன்ஸ் டே" வியாபாரம் கூடக் கொடி கட்டி பறக்கலாம அங்கே. காரணம், ஃபாண்டஸி நிலையில் எல்லாமே அழகாகத்தான் இருக்கும்...

ஆகா மொத்தத்தில் இவனுங்களுக்கு (காதலிக்கிறவங்களுக்கு) உண்மையான guts இருந்தால் காதலிப்பவளையே கரம் பிடித்து பிறகு இன்று இந்த ஃபாண்டஸி நிலையில் செய்வதை தொடரட்டும் நான் ஒத்துக் கொள்கிறேன், இவனுங்க a real gutsy guys என்று. அதுவரைக்கும் இது ஒரு பேத்தல் ஏப்ரல் ஃபூல் டே, to pacify eachother... shame on them.

Unknown said...

வாங்க வடுவூராரே,
தஞ்சாவூர் பக்கம் பல கிராமங்களில் இன்னும் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன்!

'ஒலிக்களஞ்சியத்துல' இன்னும் இந்தக் கொடுமையெல்லாம் நடக்குதா? :)
ஆமா என்டியுசி 'இதய ஒலி'(?) இன்னும் இருக்குதா?

Unknown said...

வாங்க குசும்பரே...ஆமாங்க. முன்னெயெல்லாம், கோயில் திருவிழா, முளைப்பாரி, கெடா வெட்டு, ரங்கராட்டினம் அப்பிடின்னு, கிராமங்கள் களை கட்டும். எல்லாமே இப்போ நினைவுகளில் மட்டும் :(

நீங்க சொல்றமாதிரி, ஆட்டோமாடிக் தேர் வந்தாலே நல்லதுதானே...தேரே இல்லாமே இருக்குறதுக்கு... :)

சிறில் அலெக்ஸ் said...

நல்ல பதிவு. கிராமங்களெல்லாம் இன்றைக்கு ரெம்பவே மாறிடுச்சுங்க. ரெம்ப கவலையா இருக்குது.. அது சரி நீங்கெல்லாம் அமெரிக்கா பேரிக்காண்ணு சுத்துறீங்க நாங்க மட்டும் கிராமத்தானா இருக்கணுமான்னு யாரும் கேட்கிறதுக்குள்ளார விடு ஜூட்.
:)

சுந்தரவடிவேல் said...

அருமை! தலைப்பை வெகுவாக ரசித்தேன் :)

பழைய காலத்து வசந்த விழா, காணும் பொங்கல் எல்லாம் ஒரு மாதிரியான அன்பர் தினங்கள்தாம். சாதிகள் வேரூன்றி, காதல் ஒழிக்கப்பட்டபோது இவையும் அழிந்துபோயிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம். மீண்டும் துளிர்க்கிறது. ஆனால் கூடவே அமெரிக்க நுகர்வியத்தையும் தூக்கிக்கொண்டு வருவதுதான் சோதனை. இந்த மாதிரி காமாண்டி வகையான விழாக்களை மீட்டெடுத்தோமென்றால் நன்றாகத்தானிருக்கும்!

தெகா, //ஏன்னா திடீரென்று பரவாக்கோட்டை, கரம்பக்குடி போன்ற ஏரியாக்களில் எல்லாம் மின்யாபாலிஸில் பொழிகிற மாதிரியே பனிப் பொழிவாம் யாருமே வெளியில் எல்லாம் வருவது கிடையாது... எல்லாம் வெள்ளைக்காரய்ங்க ஆகிட்டாங்க :))//

அதுலயும் இந்த கடுத்தம் சற்ரியான பனியாம் :))


கொசுறு: காலையில வானொலியில கேட்டது, செய்தியெதும் பார்க்கல - தென்கொரியாவுல ஒரு செல்பேசியில 'லவ்வு மீட்டரு/மானிட்டரு/டிடெக்டரு' பொருத்திக்காங்களாம். மேற்படி கருவியைக் கொண்டு அந்தப் பக்கமிருந்து பேசுற அன்பர் உண்மையா லவ்வுறாரா இல்லாட்டி, சும்மானாச்சுக்கும் சொல்றாரான்னு கண்டுபுடிச்சிரலாமாம். பேசும்போது உசாராப் பேசணும்:))

வவ்வால் said...

தஞ்சாவூரார்,

அட்டகாசமான மண்மணத்துடன் எழுதி இருக்கிங்க, அருமை. இதே போல ஒரு விழா எங்கூர்ப்பக்கமும் நடக்கும், ஆனால் அது காமன் பண்டிகையா என்னனு தெரியல, ஆனால் நீங்க சொன்ன அத்தனை அம்சமும் இருக்கும்.

அப்புறம் மசானக்கொள்ளைனு ஒன்னு நடக்குமே அதை விட்டிங்க, அது வேற சந்தர்ப்பத்துலயா?

பொங்கலுக்கு முன்னர் வரும் போகிக்கும் காமன் பண்டிகைனு பேர் உண்டென நினைக்கிறேன்.

பழைய அம்சம் எல்லாம் கிராமங்களை விட்டு போயாச்சு தான், நீங்க சொன்ன புலியாட்டம், தெருக்கூத்து , நாடகம் தான் அந்த விழாக்களில் அப்போதெல்லாம் இப்போ எல்லாம் ஆர்கெஸ்ட்ரா வைக்கிறாங்க...(அதிலும் இப்போலாம் டான்ஸ் ஆடுற ஆர்க்கெஸ்ட்ரா வேணுமாம்) நல்ல முன்னேற்றம் தான். எங்க ஊர் தொழிலதிபர்கள்(அதான் நீங்க சொன்ன பொட்டிக்கடைக்காரர், டீக்கடைக்காரர்) எல்லாம் வசதியா ஆகிட்டாங்க,அவங்க ஸ்பான்ஸர் மற்றும் பிரெசெண்டு (அதாவது பஞ்சாயத்து பிரசிடெண்ட்) எல்லாம் திடீர் கலாச்சார போஷகர்களாக மாறி புதுமையா மக்களை மகிழ்விக்க ஆரம்பித்துட்டாங்க :-))

சுரேகா.. said...

//சாயந்திரமே, தெருவுல இருக்குற 'தொழிலதிபர்கள்' (பெட்டிக் கடைக்காரர்கள் என்று பொருள் கொள்க!) //

:-)))))))

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க!

இதுதான் லாவணி பாடுறதுன்னு சொல்லுவாங்க!
எரிந்த கட்சி...எரியாத கட்சி ன்னு!

நீங்க சொன்னபிறகுதான் ...அட..ஆமா.இந்த பண்டிகை எங்க போச்சுன்னு நினைக்கத்தோணுது.!

கலக்குங்க!

நாடோடி இலக்கியன் said...

எங்கள் ஊரில் இப்பொழுதும் கொண்டாடப்பட்டு வறுகிறது காமன் பண்டிகை.16ம் நாள்தான் காமனுக்கு தீ வைப்பார்கள்.அந்த 16 நாட்களும் பட்டானி,சுண்டல்,பொறிகடலை என்று எதாவது ஒன்று கொடுப்பார்கள்.இதற்கு ஊரில் உள்ள அத்தனை குடும்பங்களிலும் நிதி வசூலிக்கப்படும்.எங்கள் ஊரிலும் பெண்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள்,10 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளுக்கு அனுமதி உண்டு.

என் கிராமத்து நினைவுகளை மீட்ட செய்ததற்கு நன்றி தஞ்சாவூராரே!!

Unknown said...

நன்றி, ஜோதிபாரதி.
உங்கள் ஊரில் இன்னும் இந்த விழாக்கள் நடப்பது, கேட்க சந்தோசமா இருக்கு... 'நாகரீகத்தில்' பின் தங்கி இருக்கீங்க என்று பொருள் :)

Unknown said...

இளா,

அட, அப்போ உங்க ஊரு ரொம்ப முன்னேயே 'நாகரீக'மடைஞ்சுடுச்சுன்னு சொல்லுங்க :)

எங்க ஊர்லயும் இப்போ கொண்டாடுறது இல்ல. எனக்கு அடுத்த தலைமுறைக்கு இது பற்றி தெரியுமா என்பது சந்தேகமே!

Unknown said...

நன்றி, தெகா!

//ஏன்னா திடீரென்று பரவாக்கோட்டை, கரம்பக்குடி போன்ற ஏரியாக்களில் எல்லாம் மின்யாபாலிஸில் பொழிகிற மாதிரியே பனிப் பொழிவாம் யாருமே வெளியில் எல்லாம் வருவது கிடையாது... எல்லாம் வெள்ளைக்காரய்ங்க ஆகிட்டாங்க//

:))) ரொம்ப பேசினீங்கன்னா, அடுத்த முறை மின்னியாபோலிஸ் வரும்போது, 'முழு வெள்ளை கார்பெட்' வரவேற்புதான்! எங்கூரு ஏசியையும் ஒரு பத்து டிகிரி கொறச்சு -40 ஆக்கிடுவோம் :)

Unknown said...

நன்றி, சிறில்..

//அது சரி நீங்கெல்லாம் அமெரிக்கா பேரிக்காண்ணு சுத்துறீங்க நாங்க மட்டும் கிராமத்தானா இருக்கணுமான்னு யாரும் கேட்கிறதுக்குள்ளார விடு ஜூட்.//

சாதாரணமான ஒரு வாக்கியத்துல, நச்சுன்னு ஒரு பெரிய விஷயம் சொல்லியிருக்கீங்க :)

Unknown said...

வாங்க, சுந்தரவடிவேல். முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

//ஆனால் கூடவே அமெரிக்க நுகர்வியத்தையும் தூக்கிக்கொண்டு வருவதுதான் சோதனை. //

இதுதான் வேதனையாகவும் இருக்கு :(

//அதுலயும் இந்த கடுத்தம் சற்ரியான பனியாம் :))//

'கடுத்தம் - மறந்து போன, கிராமத்து வழக்கில் இருக்கும் இன்னொரு வார்த்தை. எங்கூரில் 'கெடுத்தம்' ன்னு சொல்லுவாங்க :)

தருமி said...

சின்னப் பிள்ளையில ஓரிரு தடவை எங்க கிராமத்தில 'சொக்கப் பானை' கொழுத்தி உசரத்துக்கு எரிவதைப் பார்த்திருக்கிறேன். பாரதிராஜா படம் ஒன்றில் கடைசி சீனில் கூட வரும். அது எந்தப் பண்டிகை சார்ந்தது என்பது தெரியவில்லை.

Unknown said...

வவ்வால், நன்றி!

//அப்புறம் மசானக்கொள்ளைனு ஒன்னு நடக்குமே அதை விட்டிங்க, அது வேற சந்தர்ப்பத்துலயா?//

மயானக்கொள்ளை? கேள்விப்பட்டுருக்கேன். ஆனா, எங்க ஊரு பக்கம் (மன்னார்குடி மற்றும் சுத்துப்பட்டி 18 பட்டி!)அது கொண்டாடுறது இல்ல.

//அவங்க ஸ்பான்ஸர் மற்றும் பிரெசெண்டு (அதாவது பஞ்சாயத்து பிரசிடெண்ட்) எல்லாம் திடீர் கலாச்சார போஷகர்களாக மாறி புதுமையா மக்களை மகிழ்விக்க ஆரம்பித்துட்டாங்க :-))//

ஆமாங்க. செல ஊருகள்லே, சினிமா நடிகைகளை கூட்டிட்டு வந்து வேற 'கலை நிகழ்ச்சி' நடத்த சொல்றாங்களாம். கொடுமை...கலைக்கு வந்த சோதனயப் பாத்தீங்களா?

Unknown said...

சுரேகா, முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

//இதுதான் லாவணி பாடுறதுன்னு சொல்லுவாங்க!
எரிந்த கட்சி...எரியாத கட்சி ன்னு!//

எங்க ஊர்ல ஒரே ஒரு தடவை இந்த லாவணி நடந்தது. அப்புறம், ஊர்க்காரர்களின் ஒற்றுமையின் பலம் தாங்க முடியாம, நின்னு போச்சு :)

//நீங்க சொன்னபிறகுதான் ...அட..ஆமா.இந்த பண்டிகை எங்க போச்சுன்னு நினைக்கத்தோணுது.!//

ஆமா, இதே மாதிரி நிறைய விஷயங்கள் காணாமப் போய்ட்டு இருக்கு (விவசாயம் உள்பட!). என்ன பன்றதுங்குற குழப்ப நிலையில்தான் நாம்... :(

Unknown said...

நாடோடி இலக்கியன், நன்றி! கிட்டத்தட்ட உங்கள் ஊரிலும் இதே மாதிரிதான் போல!

//16ம் நாள்தான் காமனுக்கு தீ வைப்பார்கள்.அந்த 16 நாட்களும் பட்டானி,சுண்டல்,பொறிகடலை என்று எதாவது ஒன்று கொடுப்பார்கள்.இதற்கு ஊரில் உள்ள அத்தனை குடும்பங்களிலும் நிதி வசூலிக்கப்படும//

சரிதான்.. எங்கள் ஊரிலும் 16-ம் நாள் இரவுதான் கொளுத்துவார்கள். பிழையாகச் சொல்லிவிட்டேன்! நம்மூர்ல, அடுத்த நாள்தான் வீட்டுக்கு வீடு வசூல் (புலியக் காட்டி மெரட்டி :) மொதல்னாள் sponsors மட்டும்தான்!

Unknown said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

தஞ்சாவூரார்,

///சின்னப் பிள்ளையில ஓரிரு தடவை எங்க கிராமத்தில 'சொக்கப் பானை' கொழுத்தி உசரத்துக்கு எரிவதைப் பார்த்திருக்கிறேன்.//

இது எங்கூர் பக்கம் நடக்குறதில்லை. திருவாரூர், நாகை பகுதிகளில் நடக்கக் கேள்விப்பட்டிருக்கிறேன்!//

சொக்கப்பானை கொளுத்துரது இப்போவும் எல்லா ஊருலயும் இருக்குமே , அது கார்த்திகை தீபத்தன்னிக்கு கொளுத்துறது. எதாவது சிவன் கோயில் இருந்தா அது முன்ன நடக்கலாம் , இல்லை முருகன் கோயில் முன்ன நடக்கும்.

அனேகமா சொக்கப்பன் கொளுத்துவது என்பது சொக்கப்பானை ஆகி இருக்கும் என நினைக்கிறேன்.சொக்கப்பன் மன்மதனை கொளுத்தியதை சொல்றாங்களோ?

குமரன் (Kumaran) said...

பரவாக்கோட்டையில மட்டுமில்லை தஞ்சாவூரரே. எங்க மதுரை டவுன்லயும் இந்த காமன் பண்டிகை உண்டு. சின்ன வயசுல எங்க வீட்டுப்பக்கத்துத் தெருவுல இருக்குற நாற்சந்தி தேவர் சிலை பக்கத்துல இந்த பண்டிகையைப் பாத்திருக்கேன். தெற்குமாசிவீதி மறவர்சாவடி பிள்ளையார் கோவில்லயும் உண்டு. அந்தப் பண்டிகைக்காகவே ரெண்டு இடத்துலயும் வெள்ளையானை பொம்மையும் உண்டு. பெருசா இருக்கும். அந்த வெள்ளையானை மேல ஏறி வர்ற சாமி காமதகனத்தன்னைக்கு காமன்னு சொல்லிக் கட்டிவச்சிருக்கிற சின்ன பந்தலை எரிச்சுவிடும். ரயில் பட்டாசுன்னு சொல்லுவாங்க இல்லை. அது கயித்துல கட்டி விட்டிருப்பாங்க. இதே மாதிரி ரயில் பட்டாசை 'தேவரின் தெய்வம்' படத்துல திருச்செந்தூர் சூர சம்ஹாரத்துலயும் பயன்படுத்துறதைப் பின்னாடி பாத்திருக்கேன்.

காமனை எரிச்சபின்னாடி ஆம்பளைங்களும் பொண்ணுங்களும் சுத்தி உக்காந்து ஒப்பாரி வைப்பாங்க.

மதுரையில இருந்தவரைக்கும் ரெண்டு இடத்துலயும் காமன் பண்டிகை நடக்குறதைப் பாத்திருக்கேன். இன்னைக்கும் நடக்குதுன்னு தான் நினைக்கிறேன்.

துளசி அக்கா சொன்ன மாதிரி இது சிவபெருமான் மன்மதனை எரிச்சதைப் பத்தி தான் கொண்டாடுறாங்க. ஹோலி பண்டிகை அன்னைக்குத் தான் காமன் பண்டிகையும் நடக்குறதைப் பாத்திருக்கேன்.

காதலர் தினம்ங்கறதை விட அன்பர்கள் தினம் பொருத்தமா இருக்கு.

வவ்வால் சொல்ற மசானக் கொள்ளையையும் பாத்திருக்கேன். ஆனா அது காமன் பண்டிகையை ஒட்டி இல்லை. வேற திருவிழாவை ஒட்டி வரும்.

ஆக நீங்க தான் நம்ம ஊரு ஏசியைக் கூட்டிக் கொறச்சுக்கிட்டு இருக்கீங்களா? ஏய்யா வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க? உடனே 70 டிகிரி கொண்டு வராட்டி உங்க வீட்டுக்கு வந்து உங்களை உதைக்கப் போறேன். :-)

சொக்கப் பனை கொளுத்துறது வவ்வால் சொன்னது போல கார்த்திகையை ஒட்டி நடக்கும். பனையோலையாலக் கட்டுன சின்ன குடிசை மாதிரி இருக்குறதைக் கொளுத்துவாங்க. பனையோலையால செஞ்சது சொக்கப் பனை. அதுக்கும் சொக்கனுக்கும் தொடர்பு இருக்கிறதா தெரியலை. ஏன்னா சொக்கப்பனை வைணவ கோவில்கள்லயும் உண்டு.

காட்டாறு said...

இது தான் உங்க ஊரு வாசனையா? நல்லா இருக்குது நடை. எனக்கு இது புது செய்தி. :-)

பரவாவை விட்டுட்டு கோட்டைல வாலடைன்ஸ் டேன்னு நெனச்சி உள்ளே வந்தேன். ;-) ரசிச்சி வாசிச்சேன்.

Unknown said...

வவ்வால்,

//சொக்கப்பானை கொளுத்துரது இப்போவும் எல்லா ஊருலயும் இருக்குமே , அது கார்த்திகை தீபத்தன்னிக்கு கொளுத்துறது. எதாவது சிவன் கோயில் இருந்தா அது முன்ன நடக்கலாம் , இல்லை முருகன் கோயில் முன்ன நடக்கும்.//

எங்க ஊரு பக்கம் கேள்விப்பட்டது இல்லைங்க! எங்க ஊருல இப்போதான் கொஞ்ச வருடங்களுக்கு முன்னே, ஒரு பழைய்ய்ய்ய்ய சிவன் கோயில் பப்ளிக் டாய்லெட்டுலேருந்து, கோயிலா மறு உருவம் எடுத்து இருக்கு. சரியான முருகன் கோயில் இல்லை. எங்க தாத்தா கட்டுன ஒரு சின்னக் கோயில் தவிர!

//அனேகமா சொக்கப்பன் கொளுத்துவது என்பது சொக்கப்பானை ஆகி இருக்கும் என நினைக்கிறேன்.சொக்கப்பன் மன்மதனை கொளுத்தியதை சொல்றாங்களோ?//

இருக்கலாம் :) நமக்கு அந்த அளவுக்கு ஞானம் இல்லீங்க!

Unknown said...

வாங்க குமரன்,

//அந்தப் பண்டிகைக்காகவே ரெண்டு இடத்துலயும் வெள்ளையானை பொம்மையும் உண்டு. பெருசா இருக்கும். அந்த வெள்ளையானை மேல ஏறி வர்ற சாமி காமதகனத்தன்னைக்கு காமன்னு சொல்லிக் கட்டிவச்சிருக்கிற சின்ன பந்தலை எரிச்சுவிடும்.//

வெள்ளைக் குதிரை கேள்விப்பட்டிருக்கேன். வெள்ளை யானை, புதுமை!

//காமனை எரிச்சபின்னாடி ஆம்பளைங்களும் பொண்ணுங்களும் சுத்தி உக்காந்து ஒப்பாரி வைப்பாங்க.//

இப்படித்தான் மத்த சில பதிவர்களும் சொல்றாங்க. எங்க ஊருல ஒப்பாரி (இதுக்கு) வச்சு பாத்ததில்ல.

//மதுரையில இருந்தவரைக்கும் ரெண்டு இடத்துலயும் காமன் பண்டிகை நடக்குறதைப் பாத்திருக்கேன். இன்னைக்கும் நடக்குதுன்னு தான் நினைக்கிறேன்.//

அட, என்னங்க மதுர இன்னும் 'பின் தங்கி' இருக்கு? :)

//துளசி அக்கா சொன்ன மாதிரி இது சிவபெருமான் மன்மதனை எரிச்சதைப் பத்தி தான் கொண்டாடுறாங்க. ஹோலி பண்டிகை அன்னைக்குத் தான் காமன் பண்டிகையும் நடக்குறதைப் பாத்திருக்கேன்.//

என் ஓட்டும் பெரும்பான்மைக்கே!

//காதலர் தினம்ங்கறதை விட அன்பர்கள் தினம் பொருத்தமா இருக்கு.//

ஆமாங்க, எனக்கும் அதுதான் பொருத்தமா தோணுது.

//வவ்வால் சொல்ற மசானக் கொள்ளையையும் பாத்திருக்கேன். ஆனா அது காமன் பண்டிகையை ஒட்டி இல்லை. வேற திருவிழாவை ஒட்டி வரும்.//

எனக்கு, சொக்கப் பனையே புது தகவல்தான்!

//ஆக நீங்க தான் நம்ம ஊரு ஏசியைக் கூட்டிக் கொறச்சுக்கிட்டு இருக்கீங்களா? ஏய்யா வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க? உடனே 70 டிகிரி கொண்டு வராட்டி உங்க வீட்டுக்கு வந்து உங்களை உதைக்கப் போறேன். :-)//

அப்பிடி எனக்கு பவர் இருந்தா என்றென்றும் 60+ தான் :) ச்சும்மா, விஷயம் தெரியாதவங்களை பயமுறுத்த சொன்னேன். நீங்க பாட்டுக்கு ஆட்டோ கீட்டோ அனுப்பிறாதீங்க :)

Unknown said...

வாங்க காட்டாறு,

என் கிராமத்து நினைவுகளை புதுப்பிக்க ஒரு சிறு முயற்சி :) ரசிச்சதுக்கு நன்றி!

Thekkikattan|தெகா said...

//ஆக நீங்க தான் நம்ம ஊரு ஏசியைக் கூட்டிக் கொறச்சுக்கிட்டு இருக்கீங்களா? ஏய்யா வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க? உடனே 70 டிகிரி கொண்டு வராட்டி உங்க வீட்டுக்கு வந்து உங்களை உதைக்கப் போறேன். :-)//

குமரன் அது நான் வந்தேன்னு மனசு வைச்சுக் கொஞ்ச குறைச்சாங்க... ஆமா, நான் வந்திட்டுப் போனதைப் பத்தி நீங்க கேக்கவே இல்லியே, ஏன் எம்மேல ஏதாவது .... :))

Anonymous said...

'சொக்கப் பானை' cuddalore maavattangalil karthigai thipathai otti inralavum kondadapadukirathu.
ithan mukkiya Amsame palaveetu saiva asaiva unavugalai onraga kalanthu pagirnthu unbathuthan.

AZHAGI

Sathanoor Gongarayan said...

Hi,

padithen, rasithen.
Ippadi oru vilayattai patri naan kelvi pattathillai endralum, neengal kooriya vatrai paditha vudan, enakku matra siru vayathu vilayattugal nyabagam varuginrana.
Enna thaan "Roller Coaster", "Booster" endru vilyatugal indru irunthalum, avai anaithum ithu pondra vilayattugalukku nigar illai.
Athilum, bayanthu konde veedu thirumbuvathu pondru oru kick illave illai.

Thodarattum ungal parimaanangal,

Raasa.

Sanjai Gandhi said...

அண்ணே ரொம்ப நல்லா "வெளக்கி" இருக்கிங்க. நீங்க மம்முத ராசா குழுவுல இருந்திங்களாமே.. நெசமாவா? :P

Unknown said...

அழகி,

//palaveetu saiva asaiva unavugalai onraga kalanthu pagirnthu unbathuthan.//

உண்மையில் மிக முக்கியமான செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி :) கடலூர் பக்கம் இந்த பண்டிகை கொண்டாடுகிறார்கள் என்பது புதுச் செய்தி!

Unknown said...

வாங்க ராசா,

//Enna thaan "Roller Coaster", "Booster" endru vilyatugal indru irunthalum, avai anaithum ithu pondra vilayattugalukku nigar illai.//

உண்மைதான். என்னதான் புதுப்புது 'விளையாட்டுகள்' வந்தாலும், பாரம்பரிய விளையாட்டுகளுக்கு இணை இல்லை.

Unknown said...

பொடியா,

//நீங்க மம்முத ராசா குழுவுல இருந்திங்களாமே.. நெசமாவா?//

இந்த ரகசியமெல்லாம் உனக்கு எப்பிடி தெரிஞ்சது?? :)

Anonymous said...

தஞ்சாவூரான் அவர்களே,

நீங்கள் மன்னார்குடிக்கு அருகே இருக்கும் பரவாக்கோட்டையைச் சேர்ந்தவரா? ஆமாம் எனில் நான் உங்களுக்கும் பக்கத்து ஊர்தான். தற்போது பரவாக்கோட்டையில் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் என்னுடன் படித்தவர்தான். இங்கே சிங்கப்பூரில்தான் இருக்கிறார்.

எங்கள் ஊரில் இன்னும் காமன் பண்டிகை உள்ளது. ரதி-மன்மதன் வேஷம் போட்டு எல்லா தெருவும் சுற்றி வருவோம் பாடல்கள் பாடியபடி.

கோவிலுக்கு எதிரே பயறு அவித்து படையல் போட்டு பின்னர் அனைவருக்கும் கொடுப்போம்.எந்த ஊர் என்று தெரிகிறதா?

கண்டு பிடியுங்கள். முடியாவிடில் baskfraud@hotmail.comக்கு மடல் இடுங்கள்.