Showing posts with label கிராமத்து அத்தியாயம். Show all posts
Showing posts with label கிராமத்து அத்தியாயம். Show all posts

Friday, October 29, 2010

கள் வேண்டுவோர் கழகம்

80களில் தமிழகத்தில் கள்ளுக்கடைகளுக்கு அனுமதி அளித்திருந்த காலம். என் அப்பாவும் இன்னொரு உறவினரும் சேர்ந்து கள்ளுக்கடை வைத்திருந்தார்கள். அப்போது டாஸ்மாக் இல்லாத காலம், நகரங்களில் மட்டுமே 'சாராயக் கடை'கள் இருந்த காலம். உள்ளூர் குடிமக்களின் நலன் கருதி இந்தக் கடை திறக்கப்பட்டது!

கள் இறக்கவென்று 'தெக்கேருந்து' (தென் தமிழ்நாட்டிலிருந்து) கலியமூர்த்தி என்ற 'நாடாவி' (மரமேறுபவர்) வரவழைக்கப்பட்டு, எங்கள் இடத்தில் ஒரு குடிசை வீடும் அமைக்கப்பட்டு, தினமும் கள் விற்பனை ஜோராக நடந்தது. எங்கள் வீட்டில் இருந்த சில தென்னை மரங்களில் இருந்து 'தனிக்கள்' இறக்கி வீட்டுக்குப் போகும். சில மரங்களில் இருந்து 'பயனி' (பதநீர்) எடுக்கப்பட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குப் பரிமாறப்படும்.

எனக்கு முதன் முதலில் கள் குடிக்கக் கற்றுக்கொடுத்தது என் அப்பாதான் (நல்ல அப்பாடான்னு முனுமுனுக்காதீங்க!). அரை லிட்டர் காணும்படி ஒரு சொம்பில் ஊற்றிக் கொடுப்பார். 'ஒடம்புக்கு நல்லதுடா. கண்ண மூடிகிட்டு இழுத்தெறி'ன்னு சொல்லுவார். ஒருமாதிரியான இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவை அது. கொஞ்ச நேரத்துக்கு சுள்ளென்று இருக்கும், அப்புறம் சரியாகிடும். தென்னை மரக்கள், பனைமரக்கள்ளை விட கொஞ்சம் இனிப்பு அதிகம். மயக்கம் குறைவு!



நாடாவி, மரங்களைத் தேர்வு பண்ணி 'பாளை' சீவி விட்டுக் கட்டி விடுவார். சில நாட்கள் கழித்துதான் பாளை நுனி சீவி அதில் பானையைக் கட்டுவார். அடுத்த நாள் ஒரு சுரை குடுவையுடன் மேலேறி, ஒவ்வொரு பானையிலும் வடிந்திருக்கும் கள்ளை குடுவையில் சேகரித்துக்கொண்டு இறங்குவார். குடுவையில் பார்த்தால், ஊர்பட்ட பூச்சிகள் இறந்துகிடக்கும் (ஒரு வேளை போதைக்கு இதுதான் காரணமோ?) . பூச்சி, தும்பட்டைகள் வடிகட்டப்பட்டு இன்னொரு பெரிய பானையில் கள் சேகரிக்கப்படும். இப்படியே ஒரு 40-50 மரங்கள் ஏறி கள் இறக்குவார். நமக்கு ஒரு மாமரம் கூட ஒழுங்கா ஏறத் தெரியாது!!! பானையின் உள்புறத்தில் சுண்ணாம்பு தடவினால் அதில் கிடைப்பது பதநீர். அவ்வளவு சுவையாக இருக்கும். நோ மயக்கம்... :)



கடையில் ஒரு பெரிய பானை இருக்கும். அதில் சேகரம் செய்யப்பட்ட கள் ஊற்றப்படும். நமக்கு கடைக்கு செல்ல அனுமதியில்லை!! கடை பக்கத்தில் ஒரு 'சாக்கனா கடை' இருக்கும். சுண்டல், ஊறுகாய், மாங்காய் வத்தல், முறுக்கு போன்ற சைடுகளுடன், அவித்த முட்டையும் ஆம்லெட்டும் கிடைக்கும். ரொம்ப நாளாக, போதைக்காக பானைக்கு கீழே ஊமத்தங்காய்களையும், பானைக்குள் பழங்கஞ்சியும் சேர்ப்பதாக ஒரு வதந்தியும் உலவியது. உண்மை தெரியவில்லை. அங்கு போய் நமக்கு சாப்பிடவும் அனுமதியில்லை.

கள்ளுகடை வைப்பதற்கு முன்பே என் அப்பா மன்னார்குடி பகுதி 'கள் வேண்டுவோர் கழகத்தில்' இருந்தார். கள் விற்க அனுமதி தர அரசை தொடர்ந்து வற்புறுத்துவதுதான் இதன் நோக்கம். இந்தக் கழகத்தின் வழி அப்பா மன்னார்குடி சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார். மன்னை நாராயணசாமி அவர்கள் வென்று அமைச்சரான தேர்தல் அது. வெளியூரில் ரொம்பப் பிரபலம் ஆகாததாலும், உள்ளூரில் அடிதடியான 'போக்கிலி' (போக்கிரி) என்று பெயர் எடுத்திருந்ததாலும், அப்பாவால் 5000 க்குமேல் ஓட்டு வாங்க முடியவில்லையாம் :)

இப்போது கள்ளுக்கு மீண்டும் வருவோம்!! கள் குடித்தால் கேடு என்று சொல்லித்தான் அரசாங்கம் 'மேல்நாட்டு' வகை சரக்குகளை விற்கிறது. இந்த மேல்நாட்டு மதுவகைகளின் லட்சணம் நிறைய நண்பர்களுக்கும் தெரியும். என்னத்ததான் போட்டு செய்றாய்ங்களோன்னு நிறைய பேர் புலம்புவதையும், ஒரு குவாட்டர்தான் சாப்பிட்டேன் ஒரே தூக்கா தூக்கிடுச்சு போன்ற அலறல்களையும் கேட்டுகிட்டுதான் இருக்கோம். ஆனால், கள்ளில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவது இல்லை. முழுக்க முழுக்க இயற்கை அளிக்கும் ஒரு பானம்தான் இது. எனக்குத் தெரிந்து எந்த உடல் உபாதையும் இதனால் வந்தது இல்லை.

இந்தப் பதிவு, கள் குடிப்பதற்கு மட்டும் ஆதரவானது இல்லை. பனைமரத்தை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலன் கருதியும்தான். பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பொருட்களின் பயன்கள் எண்ணிலடங்காதவை. சில பயன்கள்:

- ஓலை (வீட்டுக் கூரை வேய, விசிறி, பெட்டிகள் செய்ய)
- பனை மரம் (வீடு கட்ட உதவும்)
- பனைமட்டைக் கழி (நார் உறிக்க)
- பனங்காய் (நுங்கு)
- பனங்கிழங்கு (உணவுப்பொருள்)
- கள் (சிறந்த இயற்கை பானம்)
- பதநீர் (சுவை மிகுந்த இயற்கை பானம்)
- பதநீரிலிருந்து பனைவெல்லம் (சிறந்த இயற்கை இனிப்பு)
- பனங்கல்கண்டு (இருமலுக்கு நல்லது. சிறந்த இயற்கை இனிப்பு)
- கருப்பட்டி (இரும்புச்சத்து மிகுந்த இயற்கை இனிப்பு)

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் திருச்செந்தூர் போகும் வழியில், காரை நிறுத்திவிட்டு குடும்பத்தினரைக் கொஞ்ச நேரம் காக்கவைத்து விட்டு, 3 லிட்டர் பதநீர் குடித்துவிட்டுதான் போனேன்!! வரும்போது நிறைய்ய்ய்ய்ய்ய பனங்கல்கண்டு வாங்கி வந்தோம். பால், டீயில் போட்டுக் குடித்தால் அமிர்தமாக இருக்கும்!!

இப்படி ஏகப்பட்ட பயன்தரும் பனைபொருட்களை பதப்படுத்தி விற்பனை செய்ய அரசு உதவலாம். பதநீரையும், பனம்பழக் கூழையும் பதப்படுத்தி இனிப்புகள் செய்ய பயன்படுத்தலாம். கண்ணில் தெரியா பொருட்கள் கொண்ட 'ஈக்குவல்' இனிப்பான் பயன்படுத்துவதைவிட, பனங்கல்கண்டைப் பயன்படுத்தச் சொல்லலாம். எல்லாவற்றையும் விட, கள்ளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி, அதை விற்பவர் மட்டுமல்ல, குடிப்பவர் வயிற்றையும் பாதுகாக்கலாம்.

கள் வேண்டுவோர் கழகத்தில் சேந்துகுறீங்களா?? :)

Thursday, February 14, 2008

பரவாக்கோட்டையில் வாலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள்!

என்னங்க, ஆச்சரியமா இருக்கா? இப்ப இருக்குற அமெரிக்க நுகர்வுக் கலாச்சார வாலன்டைன்ஸ் டே இல்ல அது. ஒரு ஜாலியான (அர்த்தமே புரியலேன்னாலும்!) கொண்டாட்டம்.
எனக்கு 7-8 வயது இருக்கும்போதே அந்த விழா அழிந்து விட்டது. நினைவில் இருப்பவை மட்டும் இங்கே..


அந்த விழாவுக்கு பேரு, காமன் பண்டிகை (காமாண்டி - எங்க ஊரு மொழியில!). ஒவ்வொரு தெரு முனையிலேயும் அல்லது நால்ரோடு கூடும் இடங்களிலேயும் சின்னதா ஒரு இடத்தைத் தேர்வு பண்ணி கீழே சாணம் போட்டு மொழுகி விட்ருவாங்க. நாலு மூலையிலேயும் சின்ன சின்னக் கம்பு நட்டு, சின்ன பந்தல் மாதிரி போட்டுடுவாங்க. நடுநாயகமா, ஒரு கம்பு நட்டு அதுமேலே வக்க பிரிய (வைக்கோல் கயிறு) சுத்தி உச்சியில ஒரு வரட்டிய வச்சு கட்டிவிட்ருவாங்க. அந்தக் கம்பு ஒரு கரண்டிய நட்டு வச்ச மாதிரி இருக்கும் (உத்தேசமா!). அதுக்கு, மாவிலை, வேப்பிலை, குங்குமம், திருநீறு எல்லாம் வச்சு அலங்காரம் பண்ணியிருக்கும். 'வசதியான' தெருவா இருந்தா அதுக்குள்ள ஒரு விளக்கு ஒன்னு வச்சு சாயந்திரம் ஆனா எரியவிடுவாங்க. இதுல பாருங்க, பொம்பளைக யாரும் இந்த 'விசேசத்துல' கலந்துக்க மாட்டாங்க. ஏன்னு எனக்குத் தெரியல!

இது ஒரு 15 நாளைக்கு அப்படியே இருக்கும். யாரும் கண்டுக்க மாட்டாங்க!! தெருப் பெருசுங்க 15ஆம் நாள் முடிவுல ஒன்னு கூடி, இன்னிக்கு ராத்திரிக்கு 'காமாண்டி கொளுத்துறது' அப்பிடின்னு 'அதிகாரப்பூர்வமா' அறிவிப்பாங்க! அன்னிக்கு ராத்திரிதான் விசேசம். சாயந்திரம் ஆனா, வீட்டுல வெளையாடப் போறதா பொய் சொல்லிட்டு, தெருமொனைக்கு ஜூட் விடுவோம். வீட்டுப் பெருசுங்களுக்குத் தெரியும், காமாண்டி கொளுத்துறதப் பாக்க போறான்னு!

சாயந்திரமே, தெருவுல இருக்குற 'தொழிலதிபர்கள்' (பெட்டிக் கடைக்காரர்கள் என்று பொருள் கொள்க!) மற்றும், 'பெருந்தனக்காரர்கள்' அளிக்கும் அஞ்சு பத்த வச்சுகிட்டு, பொட்டுக்கடலையும், நாட்டுச் சக்கரையும் வாங்கி வச்சுருப்பாங்க. ஒரு ஏழு எட்டு மணி ஆனவுடனேதான்யா, மெயின் கூத்து ஆரம்பிக்கும். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு 'பாட்டுக்காரர்' இருப்பார். அவருக்கு 'ஆனத' பாத்துகிட்டா (செல பேரு வெத்தலை பாக்கு - low maintenance, செல பேரு 'தண்ணி மிண்ணி' கேப்பாங்க!), அவரு ஸ்பாட்டுக்கு வந்துடுவாரு கொரல தட்டி சட்டி சரி பண்ணிகிட்டு!

பாட்டுக்காரர் சிக்னல் குடுத்தவுடனே, ஒரு ரெண்டு விடலப் பசங்கள செலெக்ட் பண்ணி, திருநீறு பூசி சாமி கும்பிடச் சொல்லுவாங்க. ஒருத்தன் ரதி, இன்னொருத்தன் 'மம்முதன்' (மன்மதன்). ரெண்டு பேரும் ரெண்டு குழுவுக்குப் பிரதிநிதி! ரெண்டு குழுவும் எதிரும் புதிருமா நிக்கும். பாட்டுக்காரர் நடுவாந்திரமா நிப்பார் (செல தெருவுல குழுவுக்கு ஒரு பாட்டுக்காரர் இருப்பார்). ரெண்டு குழுவுலேயிருந்தும் ஒரு 'பலசாலி' கையில் நீள துண்டோட இருப்பாரு. துண்ட அந்தந்த எளவட்டத்தோட இடுப்புல சுத்தி ரெண்டு மொனையையும் பலசாலி கையில வச்சுருப்பாரு. ரதி, மம்முதன் ரெடி. பாட்டுக்காரரு நல்லா கொரலெடுத்துப் பாடுவாரய்யா... அப்பிடி பாடுவாரு. நமக்கு இப்போ ஒண்ணும் ஞாபகம் இல்ல! அப்பிடி, பாடும் போது, ரதி பக்கம் பாடும்போது, மம்முதன் அப்பிடியே ரதி பக்கம் வருவாரு. ஒடனே பலசாலி, துண்ட ஒரு இழு இழுத்து மம்முதனக் 'கட்டுப் படுத்துவாரு'!! அதே மாதிரி, ரதி் பக்கமும் நடக்கும்.

பாட்டெல்லாம் முடிஞ்ச பெறகு (இல்ல, பாட்டுக்காரருக்கு 'சரக்கு' தீந்தபெறகு!), போட்டு வச்ச பந்தலப் பிரிச்சுப் போடுவாங்க. எல்லாத்தையும் கூட்டிக் குமிச்சுத் தீ வச்சுருவாங்க!!!! அப்படியே சைடுல, பொட்டுக்கடல வினியோகம் நடக்கும். தீ அணைஞ்சவுடனே எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போய்டுவாங்க.

அடுத்த நாள், இன்னும் சரி கூத்து நடக்கும். அன்னிக்குத்தான் 'புலிவேடம்'!! வேடம் போடுறதுக்கு ஒருத்தர் ரெடியா இருப்பாரு. இத யாருக்கும் சொல்லமாட்டாங்க. ஒரு வீட்டில் ரகசியமா 'பெயிண்டிங்' நடக்கும். உடம்பு முழுதும் - ஆமா, உடம்பு முழுதும் (லங்கோடு ஏரியா தவுத்து!) பெயிண்ட பூசிகிட்டு, 'புலி' ரெடியாய்டும். செல படங்கள்ல காட்டுற மாதிரி துணிப்புலி இல்ல. வெளியூர்லருந்து 'டமுர்செட்டு' (drums set with clarinet) வந்து எறங்கி (அவங்களுக்கும் 'எறங்கி' இருக்கும்!) கூட்டம் கள கட்ட ஆரம்பிக்கும்! நாங்க வீட்டுல அதே பொய்ய சொல்லிட்டு 'புலி' ஆட்டம் பாக்க கெளம்பிடுவோம்.

எல்லாரும் ரெடியானவுடனே, டமுரு செட்டு அடி தூள் கெளப்பும். புலி ஆட ஆரம்பிக்க, வசூல் ராஜா மஞ்சள் பையோட பின்வர, ஊர்வலம் ஆரம்பிக்கும். ஒவ்வொரு வீடா போயி, ஒரு ஆட்டத்த போட்டுட்டு வசூல பண்ணிட்டு தொடருவாங்க. செல பேரு நெல்லு குடுப்பாங்க. செல பேரு வீட்டுகுள்ள போய் ஒளிஞ்சுகிட்டு, இல்லேன்னு பொய் சொல்ல சொல்லுவாங்க. இதுல, மாமன் மச்சான் புலி வேஷம் போட்டுகிட்டு வந்துட்டான்னா போச்சு. கணிசமா ஒரு 'துகை' (தொகை) போய்டும். அங்கங்கே புலிக்கு வாய் புளிக்க எலுமிச்சம்பழம் குடுப்பாங்க. அத வாயில கடிச்சுகிட்டு புலி வேக வேகமா போக ஆரம்பிக்கும். ஒரு ரெண்டு மூனு தெரு போனதுக்கு அப்புறம், புலிக்கு கொஞ்சம் கொஞ்சமா 'கிலி' புடிக்க ஆரம்பிக்கும். ஏன்னா, பெயிண்டெல்லாம் நல்லா காஞ்சு ஒடம்பு வறவறன்னு ஆக ஆரம்பிக்கும். வேர்வை சொரக்கும் ஆனா, வெளியில போக வழியில்லாமே 'புலி' படற அவஸ்தை பாவமா இருக்கும்!

ஒரு கட்டத்துல புலி வேற வழியில்லாம, போதுண்டா சாமின்னு ஊர்க்கொளம் பாத்து வேக வேகமா 'ஓட' ஆரம்பிச்சுறும். 'புலிப்படை' பின்னாலேயே மண்ணெண்ணை, சோப்பு சகிதம் ஓடும். ஒரு வழியா கொளத்தடியில போயி ஒக்காந்து, நண்டு சுண்டெல்லாம் பெயிண்ட சொரண்டி எடுக்கும். அப்ப 'புலி' படுற வேதன நமக்கெல்லாம் சிரிப்பா இருக்கும். ஒரு வழியா சொரண்டல் முடிஞ்சு ஒரு குளியலப் போட்டுட்டு, அப்பிடியே மத்ததயும் உள்ளே போட்டுட்டு புலி ரெஸ்ட் எடுக்க குகைக்குள்ள (வீடுதாங்க!) போயிடும். புலிப்படை, டமுரு செட்டுக்கு செட்டில் பண்ணி அனுப்பிட்டு, வசூல எடுத்துகிட்டு 'வேட்டை' தேடி கடைக்குப் போயிடுவாங்க!! நாங்களும் திட்டு வாங்க காதுகள ரெடி பண்ணிகிட்டு மெதுவா வீட்டுப் பக்கம் ஒதுங்குவோம்.

இந்த நிகழ்ச்சியெல்லாம் ஏதாவது புராண கதைய ஒட்டி நடந்ததா, அந்தப் பாட்டுகளுக்கு என்ன பொருள், ரதி, மன்மதன் உண்மை மனிதர்களா, ஏன் 'காமாண்டியை' எரிக்கிறாங்க - இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சா இங்கே சொல்லுங்களேன்! இப்போ எங்க ஊர்ல இதெல்லாம் நடக்குறது இல்ல. எல்லாரும், 'நாகரீகமாயிட்டதாலே' இனிமே வாலன்டைன்ஸ் டே கொண்டாடுவங்கன்னு நெனைக்கிறேன். ஆனா, நான் பாத்தது கிட்டதட்ட வாலன்டைன்ஸ் தின கொண்ட்டட்டம்னுதான் சொல்லனும்.

கொசுறு: சிங்கப்பூரில் மட்டும்தான் இந்த நாளுக்கு ஒழுங்கான தமிழ்ப்படுத்தல் இருக்குன்னு நெனைக்கிறேன். அங்கே 'அன்பர்கள் தினம்' அப்பிடின்னுதான் சொல்றாங்க. அன்பு வைத்திருக்கும் யாருக்கும் வாழ்த்துக்கள், பரிசுகள் பரிமாறிக்கொள்ளலாம். ஆனா, எதையுமே அறைகுறையாகப் புரிந்துகொண்டு பந்தா காட்டும் நமது நாட்டில்.....???