Thursday, March 13, 2008

லஞ்சம் இல்லாம காரியம் சாதிக்கனுமா? இவரைப் போய் பாருங்க!

இவர் பேரு Mr. RTI. இவருக்கு வயசு 3 தான். ஆனா பவர் ரொம்ப அதிகம்! இவர் எப்பிடி உங்களுக்கு உதவி பண்ணுவாரு?

உதாரணத்துக்கு, நீங்க உங்க புது வீட்டுக்கு மின்சார இணைப்பு வாங்கனும். பொறுப்பான குடிமகனா, விண்ணப்பம் எல்லாம் நிரப்பி, வட்டார மின் வாரிய அலுவலகத்துக்கு அனுப்பிச்சிட்டீங்க. சாதாரணமா, 10 நாள் எடுக்கவேண்டிய இந்த சேவை 20 நாளாச்சு, 40 நாளாச்சு ஒண்ணுத்தையும் காணோம். போன் பண்ணி பாக்கிறீங்க, நேரா போயி பாக்கிறீங்க ம்ம்ம்ஹூம்ம் ஒண்ணும் ஆகலே. வெறுத்துப் போய் இருக்குற நேரத்துல, பக்கத்து தெரு பரமசிவம் வறாரு.

'என்னங்க, இதுக்குப் போய் வருத்தப் படுறீங்களே. ஜேயீயை பாத்து ஒரு ஆயிரம் ரூவா குடுத்தா டாண்ன்னு வரும் கரண்டு' ன்னு சொல்றாரு. நீங்க இந்த சமயத்துல தாராளமா நம்ம RTI யை அணுகலாம்!

நீங்க செய்யவேண்டியது எல்லாம், நேரா வட்டார மின்வாரிய அலுவலகத்துக்கு போங்க. அங்கே போய், 'Public Information Officer - PIO' ஐப் பாக்கனும்னு சொல்லுங்க. அவர்கிட்டே போய், ஒரு பத்து ரூவா கட்டுனா ஒரு படிவம் குடுப்பாரு. அத வாங்கி, உங்க முகவரி, நீங்க விண்ணப்பம் அனுப்புன நாள், அதற்கான கட்டணம் கட்டப்பட்ட ரசீது (நகல்) எல்லாம் சேத்து, சுருக்கமா, தெளிவா உங்கப் பிரச்சினையைப் பத்தி எழுதுங்க. 40 நாள் ஆச்சு, என் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்குன்னு கேள்வி கேட்டு படிவத்த முடிச்சு அத அவருகிட்டே குடுத்துட்டு வாங்க. வேற யாருக்கும் எதுவும் குடுக்கவேண்டாம்.

நேரா போக முடியலேன்னா பரவாயில்ல. ஒரு வெள்ளைத்தாளில் மேற்கண்டவற்றை எழுதி, 10 ரூபாய்க்கு போஸ்டல் ஆர்டரோ இல்ல டிமாண்ட் டிராப்டோ எடுத்து (Payable to PIO - Department Name) சாதாரண தபால் அல்லது பதிவுத் தபாலில் கூட அனுப்பலாம். சில தபால் நிலையங்களுக்கு போயி கூட படிவத்தைக் குடுக்கலாம். அவங்க, பணத்த வாங்கிகிட்டு படிவத்த ஏத்துகிட்டதுக்க்கான ஒரு ரசீது குடுப்பாங்க. எந்தெந்த தபால் நிலையங்களில் இதச் செய்யலாம்? இங்கே போய் பாருங்க.

உங்க படிவம் ஏத்துக்கலைன்னா? கவலையே வேண்டாம். அதுக்கும் நம்ம RTI ஒரு வழி பண்ணியிருக்காரு. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தல இருக்கும். இந்தத் தலைங்களுக்கு, இந்த மாதிரி படிவத்த ஏத்துக்காத PIO - க்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை அபராதம் போட அதிகாரமிருக்கு. எண்ணி 30 நாட்கள்ல (35 நாட்கள் நீங்க Assistant PIO கிட்டே படிவத்த குடுத்துருந்தா. உயிர் போற அவசரம்னா, 48 மணி நேரத்துல உங்களுக்கு தகவல் குடுத்தாகனும்்!) உங்களுக்கு தகவல் எதுவும் வரலன்னா, நீங்க அப்பீல் பண்ணலாம். பொதுவா, PIO-க்களுக்கு மேலே உள்ளவர் அப்பீல பாக்குறவரா இருப்பாரு.

இது சும்மா ஒரு மாதிரிதான். நெறய விசயங்களுக்கு நீங்க இவர் உதவிய நாடலாம்!
இவரப் பத்தி மேலும் தெரிஞ்சிக்கனுமா? கீழே உள்ள சுட்டிகள்ல போய் பாக்கலாம்:

http://www.rti.gov.in/
http://rti.aidindia.org/
http://www.righttoinformation.org/

அமெரிக்காவுல இருக்கீங்களா? கவலையே வேண்டாம். இவர நீங்க வாஷிங்டனில் சந்திக்கலாம்!

இவர் கூட பழகிப் பாருங்க. உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிடும் :) மத்தவங்களுக்கும் இவரப் பழகிப் பாக்கச்சொல்லுங்க. வாழ்த்துக்கள்!

நன்றி: http://www.indiatogether.org மற்றும் http://aidindia.org

15 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மின்சார வாரியத்தில்
பழத்தை மட்டும்
தின்று விட்டு
கொட்டை போடும்
ஆசாமிகள் இனியாவது
திருந்த வாய்ப்பு இருக்குமா?
அதற்குள்ளும் ஓட்டை
கண்டு பிடித்துவிடுவார்களே?

வடுவூர் குமார் said...

கட்டாத வீட்டுக்கு “ஆட்டோ” வராதில்ல??
இங்கு சிங்கையில் வீடு வாங்கும்/விற்கும் போதே இந்த வேலைகளை முடித்துவிடுகிறார்கள்.வீட்டுக்கு போகும் புது எனர்ஜியோட போகலாம்.
ஊரில் இந்த மாதிரி வேலைகளை எல்லாம் ஒரே சமயத்தில் நடக்குமாறு மாற்றி அமைக்கலாம்... என்ன யாராவது ஒருவருக்கு கமிஷன் கிடைக்காது. :-)

Unknown said...

மிக உபயோகமுள்ள பதிவு....

பகிர்விற்கு நன்றி...

இயற்கை நேசி|Oruni said...

அட அட இந்தப் பதிவை படிச்சவுடன் ஊரில் இருக்கும் நம்ம வீட்டுக்கு 3-phase வாங்கிறதுக்கு என்னன்னமோ என் அப்பா டைவ் அடிச்சதுதான் ஞாபகத்துக்கு வருது...

இது நிஜமாலுக்குமே ஒர்க் அவுட் ஆனா நல்லதுதான் எல்லோருக்குமே...

வவ்வால் said...

தஞ்சாவூரார் ,

நீங்க சூனியர் விகடன் எல்லாம் படிக்கறது இல்லையா அதில இந்த RTI படுற பாட்டை ஒரு ரெண்டு வாரம் முன்ன போட்டானே பாருங்க!

அந்த தகவல் அறியும் உரிமை சட்டம் படி ஒரு அதிகாரி செயல் படலைனா பெரிசா தண்டனையே இல்லை ஒரு மெமோ தருவாங்க அதனால ரொம்ப தோண்டினா விவரமே சொல்லாம இழுத்தடிச்சுட்டு மெமோ வாங்கிட்டு அந்த அதிகாரி போய்டுவார், அந்த மெமோ மேல ஆக்ஷன் யார் எடுப்பா?

அம்புட்டு தேன்!

இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தால் இது வரைக்கும் சல்லி புண்ணியம் இல்லை என்காவது அத்திப்பூத்தார் போல நடந்து இருக்கும் அவ்வளவு தான்.

உதாரணமா தமிழ் நாட்டில நடக்கிற மது விற்பனை பற்றி தகவல் கேட்டா விவரம் கிடைக்குமா?

எந்த சரக்கு , பார் நடத்துறவங்க பேரு, ஒரு பார் நடத்த மினிமம் தகுதி என்ன கேட்டா சொல்வாங்களா? இல்லை மணல் அள்ள என்ன தகுதி இதுவரைக்கும் மணல் அள்ள யாருக்குலாம் அனுமதி கொடுத்து இருக்காங்க கேட்டா?

எல்லாம் அரசியல்வியாபாரம் இதுல இந்த சட்டம் வைத்து என்ன பயன்?

காட்டாறு said...

நெசமாவே இதை உபயோகப் படுத்தினவங்களைத் தான் கேக்கனும். மெய்யாலும் சுளுவா (நீங்க சொல்லுற மாதிரி) வேலை முடியுதா? இல்ல ரப்பர் தானான்னு. அனுபவஸ்தர்கள் யாராவது சொல்லுங்கப்பா.

ORB Raja said...

வாங்க, ஜோதிபாரதி.

// பழத்தை மட்டும் தின்று விட்டு
கொட்டை போடும் //

இவிங்களுக்கு இனி ஆபத்துதான். கொஞ்ச பேராவது திருந்தினா, பெரிய வெற்றி!

வாங்க, குமார்.

//கட்டாத வீட்டுக்கு “ஆட்டோ” வராதில்ல??//

பயப்படாதீங்க :)

//இங்கு சிங்கையில் வீடு வாங்கும்/விற்கும் போதே இந்த வேலைகளை முடித்துவிடுகிறார்கள//

சிங்கப்பூர் நிலையே வேறு. நமது நாட்டுடன் சிங்கப்பூரை ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

//ஊரில் இந்த மாதிரி வேலைகளை எல்லாம் ஒரே சமயத்தில் நடக்குமாறு மாற்றி அமைக்கலாம்//

என் நீண்டநாள் கனவு இது :)

பேரரசன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ORB Raja said...

வாங்க இயற்கை நேசி,

//இது நிஜமாலுக்குமே ஒர்க் அவுட் ஆனா நல்லதுதான் எல்லோருக்குமே...//

நெறய வொர்க் அவுட் ஆயிட்டுருக்கு. மக்களிடம் இதப் பத்தி ஒரு விழிப்புணர்வு வந்தாலே பெரிய விசயம்!

ORB Raja said...

வாங்க வவ்வால்,

//நீங்க சூனியர் விகடன் எல்லாம் படிக்கறது இல்லையா அதில இந்த RTI படுற பாட்டை ஒரு ரெண்டு வாரம் முன்ன போட்டானே பாருங்க!//

நானும் படிச்சேன். ஒரு சேவைன்னு வந்தாலே அதை தவறா பயன்படுத்துறவங்க இருப்பாங்களே!

//இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தால் இது வரைக்கும் சல்லி புண்ணியம் இல்லை என்காவது அத்திப்பூத்தார் போல நடந்து இருக்கும் அவ்வளவு தான்.//

சாதனை அளவுக்கு ஒண்ணும் நடக்கலேன்னாலும், நிறைய தகவல்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. 10 நடந்தாலும், அது வரவேற்கத்தக்கதுதானே? முதலில், இந்த மாதிரி ஒரு சட்டம் இருக்குங்கிற விழிப்புணர்வு வந்தாலே சந்தோசம்தான்.

//உதாரணமா தமிழ் நாட்டில நடக்கிற மது விற்பனை பற்றி தகவல் கேட்டா விவரம் கிடைக்குமா? //

இந்த மாதிரி அரசியல் சென்சிடிவ் விவரங்கள் கிடைக்குமாங்குறது சந்தேகம்தான். முதலில், அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு (மிண் இணைப்பு போன்ற) விடிவுகாலம் பிறக்கட்டும் :)

சமீபத்துல, அண்ணா பல்கலையில் தகுதி இல்லாத பல மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது இந்த சட்டம் மூலமாக வெளியுலகுக்கு வந்தது. இது மாதிரி நிறைய பேர் இந்த சட்டத்தைப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் பதிவின் நோக்கம். நீங்களும் தெரிந்தவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

ORB Raja said...

வாங்க காட்டாறு,

//நெசமாவே இதை உபயோகப் படுத்தினவங்களைத் தான் கேக்கனும். மெய்யாலும் சுளுவா (நீங்க சொல்லுற மாதிரி) வேலை முடியுதா? இல்ல ரப்பர் தானான்னு. அனுபவஸ்தர்கள் யாராவது சொல்லுங்கப்பா.//

நிறைய வெற்றிக் கதைகள் (success stories) நான் கொடுத்த சுட்டிகளில் இருக்கு. ஒண்ணு ரெண்டு வெற்றியடஞ்சாலே சந்தோசம்தானே :)

நானானி said...

நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிகாரிகளே குறுக்கு வழிகளை சொல்லிக்கொடுப்பவர்களாக இருப்பதால்.
இம்மாதிரி வழிமுறைகள் எவ்வளவு தூரம் வெற்றியடையும்? சந்தேகம்தான்.

ORB Raja said...

வாங்க, நானானி!

//நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிகாரிகளே குறுக்கு வழிகளை சொல்லிக்கொடுப்பவர்களாக இருப்பதால்.
இம்மாதிரி வழிமுறைகள் எவ்வளவு தூரம் வெற்றியடையும்? சந்தேகம்தான்.//

இப்பத்தான் ஒரு ஆர்டிகிள் படிச்சேன். அதிகாரிங்கல்லாம் சேர்ந்து சிண்டிகேட் வச்சு, இந்த சட்டத்துலேருந்து தப்பிக்கிறாங்கன்னு :(

'திருடனாப் பாத்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' போல :( நம்பிக்கை வைப்போம். அதானே வாழ்க்கை!

நிஜமா நல்லவன் said...

இது போன்ற விஷயங்களில் சதவிகித கணக்குகளை பாராமல் ஒருவர் நன்மை அடைந்தாலும் அது இப்போதைய நிலையை விட ஒருபடி மேல் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

ORB Raja said...

நன்றி, நிஜமா நல்லவன்.

உங்க கருத்துதான் எனதும். ஒரு 10 பேருக்கு நல்லது நடந்தாலும், பாராட்டப்பட, வரவேற்கப்பட வேண்டியதுதான்!

ORB Raja said...

ஒரு வெற்றிக்கதை :

http://makkal-sakthi-eiyakkam.blogspot.com/2008/04/blog-post.html